இயேசுவின் கடைசி ஏழு வார்த்தைகள்1. பிதாவே இவர்களுக்கு மன்னியும்

 



இயேசுவின் கடைசி ஏழு வார்த்தைகள்


1. பிதாவே இவர்களுக்கு மன்னியும்


அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்              (லூக் 23:34). 


இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைகிறார்கள். சிலுவையில் அறையப்பட்ட பின்பு, இயேசுகிறிஸ்து மரிப்பதற்கு முன்பு மிகவும் முக்கியமான ஏழு வார்த்தைகளை  பேசுகிறார். இவ்வேழு வார்த்தைகளில் ""பிதாவே இவர்களுக்கு மன்னியும்'' என்று கூறியது முதலாவது வார்த்தையாகும். இந்த வாக்கியம் லூக்கா சுவிசேஷத்தில் மாத்திரமே எழுதப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட உடனோ அல்லது சிலுவையில் அறையப்படும்போதோ, அவர் இந்த வார்த்தைகளை சொல்லி ஜெபித்திருக்கலாம்.


இயேசுகிறிஸ்துவின் ஜெபம் மிகவும் எளிமையானது. ""பிதாவே இவர்களுக்கு மன்னியும்'' என்று தம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து ஜெபம்பண்ணுகிறார். இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைகிறவர்கள் மிகப்பெரிய பாவத்தை  செய்கிறார்கள். இவர்கள் செய்த இந்தப் பாவத்திற்கு மன்னிப்பேயில்லை. தேவகுமாரனை சிலுவையில் அறைந்த குற்றத்திற்காக இவர்கள்மீது நியாயத்தீர்ப்பு வரும். ஆனால் இயேசுகிறிஸ்து இவர்கள்மீதும் மனதுருக்கமாக இருக்கிறார். இவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்று தம்முடைய பிதாவிடம் விண்ணப்பம்பண்ணுகிறார். இவர்களுக்காக பரிந்துபேசுகிறார். 


இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார். தம்முடைய வேதனையின் மத்தியிலும், தம்மை சிலுவையில் அறைந்தவர்களுக்கு வரப்போகும் நியாயத்தீர்ப்பின் வேதனையைக்குறித்து இயேசுகிறிஸ்து கரிசனையோடிருக்கிறார். மனுஷருடைய பாவங்களை நீக்குவதற்காகவே  மனுஷகுமாரன் இந்த பூமிக்கு வந்திருக்கிறார். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுக்கிறார். கிறிஸ்துவின் மரணமே மனுஷருக்கு பாவமன்னிப்பை உண்டுபண்ணுகிறது. 


தம்மை சிலுவையில் அறைகிறவர்கள் பாவம் செய்கிறார்கள் என்பது இயேசுவுக்குத் தெரியும். ஆகையினால் அவர்களுடைய பாவங்களும் மன்னிக்கப்பட வேண்டும் என்று  இயேசுகிறிஸ்து ஜெபிக்கிறார். தம்மை சிலுவையில் அறைந்தவர்களுடைய பாவங்களை மாத்திரமல்ல, தங்களுடைய பாவங்களுக்காக மனந்திரும்பி இயேசுகிறிஸ்துவை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் எல்லோருடைய பாவங்களையும் மன்னிக்க வேண்டுமென்றும் இயேசுகிறிஸ்து ஜெபிக்கிறார்.  ""பிதாவே இவர்களுக்கு மன்னியும்'' என்று அவரை சிலுவையில் அறைவதற்கு காரணமாக இருக்கும் நமக்காகவும் ஜெபிக்கிறார். இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைகிறவர்கள் கொலைபாதகர்கள். தேவனுக்கு விரோதமாகவும் மனுஷருக்கு விரோதமாகவும் பாவம் செய்கிறவர்கள். என்றாலும் இவர்களுடைய பாவங்களையும் மன்னிக்குமாறு இயேசுகிறிஸ்து பிதாவிடம் விண்ணப்பம் பண்ணுகிறார். 


""தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே'' என்று தம்மை சிலுவையில் அறைந்தவர்களுக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறார். தாங்கள் யாரை சிலுவையில் அறைகிறோம் என்பதையும், தாங்கள் என்ன செய்கிறோம் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தால், இயேசுகிறிஸ்துவை அவர்கள் சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்கள். மெய்யாகவே, இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைகிறவர்கள், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள். இவர்கள் செய்யும் பாவம் அறியாமையினால் செய்யும் பாவமாகும். கர்த்தருடைய வார்த்தையையும், கர்த்தரைப்பற்றியும் அறியாதிருப்பதினால், இயேசுகிறிஸ்துவை இவர்கள் சிலுவையில் அறைகிறார்கள்.


யூதமார்க்கத்துத் தலைவர்கள் ஜனங்களுக்கு சத்திய வசனத்தை தெளிவாக போதிப்பதில்லை. ஜனங்களுடைய அறியாமல்  மார்க்கத்தலைவர்களே காரணம். ஜனங்கள் வேதவார்த்தையைக் குறித்து அறியாமையில் இருந்தால்தான் தங்களுக்கு ஆதாயம் என்று மார்க்கத் தலைவர்கள் நினைக்கிறார்கள். அறியாமையில் இருக்கிறவர்களை ஆளுகை செய்வது மிகவும் எளிது. 


வேதவாக்கியத்தை இவர்கள் அறியாதது மாத்திரமல்ல, தவறான உபதேசங்களையும் இவர்கள் பெற்றிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைவது பாவம் என்று இவர்களுக்குத் தெரியவில்லை. இயேசுவை சிலுவையில் அறைவதினால் தேவனுக்கு தாங்கள் ஊழியம் செய்வதாக நினைக்கிறார்கள்.  


சத்திய வசனத்தைக் குறித்து இவர்கள் குருடராக இருப்பதினால், அறியாமையிலிருப்பதினால், இயேசுகிறிஸ்து இவர்களுக்காக தமது பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறார். ""பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே'' என்று தம்மை சிலுவையில் அறைகிறவர்களுக்காக தமது பிதாவிடம் பரிந்துபேசி ஜெபம்பண்ணுகிறார். 


நாமும் ஜெபிக்கும்போது, நம்முடைய ஆண்டவரை ""பிதாவே'' என்று அழைத்து ஜெபிக்க வேண்டும். நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் நாம் பல காரியங்களுக்காக ஜெபம் பண்ணலாம். நாம் ஏறெடுக்கும் எல்லா ஜெபங்களிலும், பாவமன்னிப்புக்காக நாம் ஏறெடுக்கும் ஜெபமே மிகவும் முக்கியமானது. 


நம்முடைய சத்துருக்களுக்காகவும் நாம் ஜெபிக்க வேண்டும். நம்மை விரோதிக்கிறவர்களுக்காகவும், நம்மை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் நாம் ஜெபிக்க வேண்டும். நமக்கு விரோதமாக அவர்கள் செய்த பாவங்களும் மன்னிக்கப்பட வேண்டுமென்று நாம் பிதாவாகிய தேவனிடத்தில் கருத்தாய் ஜெபிக்கவேண்டும்.  இப்படிப்பட்ட ஜெபம் ஏறெடுத்ததற்கு, இயேசுகிறிஸ்துவே நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார். ""உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்'' (மத் 5:44) என்பதே இயேசுகிறிஸ்து நமக்குக் கொடுத்திருக்கும் உபதேசமாகும். இயேசுகிறிஸ்து தம்மை சிலுவையில் அறைந்த சத்துருக்களை சிநேகித்து  அவர்களுக்காக ஜெபிக்கிறார். இப்படிப்பட்ட சுபாவம் நம்மிடத்திலும் காணப்படவேண்டும். நாமும் நம்முடைய சத்துருக்களை சிநேகித்து அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். 




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.