(இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
ஐந்தாவது நெருக்கத்தின் ஜெபம்
பொருளடக்கம்
1. தாவீதின் ஐந்து முறையீடுகள் - (13:1-2)
2. மூன்று விண்ணப்பங்கள் # மூன்று காரணங்கள் - (13:3-4)
3. ஜெபத்திற்குப் பதில் பெறுவதற்கு மூன்று இரகசியங்கள் - (13:5-6)
ஒரு விடாய்த்த ஆத்துமா தேவனுடைய சமுகத்தில் அவருடைய இரக்கத்திற்காக கெஞ்சுவதுபோல பதிமூன்றாவது சங்கீதம் எழுதப்பட்டிருக்கிறது. தாவீது இந்த சங்கீதத்தை எப்பொழுது, எந்த சூழ்நிலையில் எழுதினார் என்பது தெரியவில்லை. தாவீதின் ஆத்துமா மிகுந்த வியாகுலத்திலிருக்கிறது. அப்போது அவர் தேவனுடைய இரக்கத்திற்காக கெஞ்சி ஜெபிக்கிறார்.
தாவீது மிகுந்த வருத்தத்தோடு தன்னுடைய காரியங்களை தேவனுடைய சமுகத்தில் முறையிடுகிறார். தேவன் தனக்கு உடனே உதவிசெய்ய வராமல் தன்னை மறைந்துவிட்டார் என்றும், தம்முடைய முகத்தை தனக்கு மறைக்கிறார் என்றும் தாவீது தேவனுடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். கர்த்தர் தன்னுடைய ஜெபத்திற்கு உடனே பதில் கொடுக்காமல், காலதாமதம் பண்ணுகிறார் என்று தாவீது கர்த்தருடைய சமுகத்தில் மிகுந்த துக்கத்தோடு முறையிடுகிறார் (சங் 13:1,2).
தன்னை நோக்கிப் பார்க்குமாறும், தனக்குச் செவிகொடுக்குமாறும், தன்னுடைய வழக்கை விசாரிக்குமாறும், தனக்கு ஆறுதல் கொடுக்குமாறும் தாவீது கர்த்தருடைய சமுகத்தில் மனஉருக்கத்தோடு ஜெபம்பண்ணுகிறார் (சங் 13:3,4). கர்த்தர் தன்னுடைய ஜெபத்திற்கு பதில் கொடுப்பார் என்று தாவீது முழுநிச்சயத்தோடு நம்பியிருக்கிறார். கர்த்தர் தனக்கு சமாதானம் கொடுப்பார் என்றும், இதனால் தன்னுடைய இருதயம் இரட்சிப்பினால் களிகூரும் என்றும் தாவீது மகிழ்ச்சியோடு சொல்லுகிறார். கர்த்தர் தனக்கு நன்மை செய்தபடியால் தான் அவரை பாடுவதாக தாவீது அறிக்கை செய்கிறார்.