ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் (1859 - 1947) 7


ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் (1859 - 1947) 7






கர்த்தருடைய வேதத்தில் இரவும் பகலும் தியானமா இருந்த தேவ மனிதர்



(சங் 1 : 2, ஏசாயா 66 : 2)

இரண்டு காரியங்கள் விக்கிள்ஸ்வொர்த்தின் முழு வாழ்க்கையையும் அவரது தேவ ஊழியத்தையும் ஆளுகை செய்து கொண்டிருந்தது. ஒன்று அவர் தேவனுடைய வார்த்தையின் மேல் பட்சிக்கிற அக்கினியான வாஞ்சையும் விருப்பமும் கொண்டிருந்தார். இரண்டாவது, அந்த வார்த்தையின் அதிபதியாம் சர்வ வல்ல தேவனிடம் கட்டுக்கடங்கா நேசம் பாராட்டி அவரில் அன்புகூர்ந்தார்.

"உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுவதும் அது என் தியானம்" (சங் 119 : 97)

"மிகுந்த கொள்ளையுடமையைக் கண்டு பிடிக்கிறவன் மகிழுகிறது போல நான் உமது வார்த்தையின் பேரில் மகிழுகிறேன்" (சங் 119 : 162)

"உம்முடைய
வேதத்தையோ நேசிக்கிறேன்" (சங் 119 : 163)

"உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு, அவர்களுக்கு இடறலில்லை" (சங் 119 : 165)

மேற்கண்ட நான்கு வசனங்களும் ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த்தின் பரிசுத்த வாழ்வின் கருப் பொருளாகும். 15 நிமிடங்களுக்கு மேல் அவரால் தேவனுடைய வார்த்தைகளை வாசிக்காமல் இருக்க முடியாது. எந்த ஒரு இடத்தில் இருந்தாலும் எப்படிப்பட்ட மக்களின் சகவாசத்தில் அப்பொழுது இருந்தபோதினும் அவர் அதைச் செய்து வந்தார். ஆகாரம் சாப்பிடும் சாப்பாட்டு மேஜையிலும் அவர் அதைச் செய்தார்.

ஒரு தடவை எனது சகோதரன் அவரை தனது வாகனத்தில் அவர் தேவனுடைய செய்தியை கொடுக்க வேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தான். அவர்கள் போய்க் கொண்டிருந்த போது அவர்கள் இருவரும் உலகத்தின் நடப்புச் செய்திகளை பேசிக்கொண்டு சென்று கொண்டிருந்த சமயம் தேவ மனிதர் திடீரென்று சத்தமிட்டு "நிறுத்துங்கள்" என்று கூறவும் எனது சகோதரன் மிகவும் பயந்து ஏதோ ஆகிவிட்டது என்று வாகனத்தை நிறுத்தியிருக்கின்றான். அப்பொழுது விக்கிள்ஸ்வொர்த் தலை குனிந்து "ஆண்டவரே, நான் மிகவும் துக்கமடைகின்றேன். நாங்கள் உம்மையும், உமது வார்த்தைகளையும், அழியும் ஆத்துமாக்களையும் குறித்துப் பேசாமல் மற்ற எல்லாக் காரியங்களையும் பற்றி பேசிக்கொண்டு வந்துவிட்டோம். எங்களை தயவாக மன்னியும்" என்று ஜெபித்திருக்கின்றார். அதின் பின்னர் மீதமுள்ள அவர்களது பயணத்தின் சம்பாஷணை ஆண்டவருடைய காரியமாக இருந்திருக்கின்றது.

"நான் கர்த்தரை அவரது வார்த்தையின் மூலமாக மாத்திரமே அறிந்து உணர்ந்து கொண்டிருக்கின்றேனே தவிர வெறும் உள்ளத்தின் உணர்ச்சிகள், மனதின் தூண்டுதல்களைக் கொண்டல்ல" என்று அவர் சொல்லுவார்.

"சிலர் ஆண்டவருடைய வார்த்தைகளை எபிரேய பாஷையில் வாசிக்கின்றனர். மற்றும் சிலர் கிரேக்க மொழியில் படிக்கின்றனர். ஆனால், நானோ அவற்றைப் பரிசுத்த ஆவியால் படிக்கவே விரும்புகின்றேன்" என்று அவர் கூறுவார். அவருக்கு எபிரேய, கிரேக்க மொழிகளில் ஒரு வார்த்தை கூட தெரியாத போதினும் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகையோடு அவர் கொடுக்கும் தேவச் செய்திகளில் மேற்கண்ட மொழிகளின் மூலக் கருத்துக்கள் அடங்கியிருப்பதைக் கண்டு அந்த மொழிகளின் வல்லுனர்கள் பிரமிப்படைந்திருக்கின்றனர்.

தேவமனிதர் தனது தூக்கத்திற்கு இரவில் செல்லுவதற்கு முன்பாக இறுதியாக ஒரு தடவை ஆண்டவருடைய பரிசுத்த வார்த்தைகளால் தன்னுடைய இருதயத்தை நிரப்பிக் கொண்டு இளைப்பாறச் செல்லுவார். அவரது தூக்கத்திலும் அவரது உள்ளம் தேவனுடைய வார்த்தைகளையே தியானித்துக் கொண்டிருக்கும். தேவனுடைய வார்த்தைகளைக் குறித்து ஆழமான ஆவிக்குரிய கருத்துகளுடன் அவர் அடிக்கடி தனது தூக்கத்திலிருந்து கண் விழிப்பார். ஒரேயடியாக படுக்கையிலிருந்து கண் விழித்து எழுந்ததும் திரும்பவும் வழக்கம்போல முழுமையாக கர்த்தாவின் வசனங்களுக்குள் பக்தன் சென்றுவிடுவார்.




விக்கிள்ஸ்வொர்த் தமது தேவ செய்திகளை கேட்க வரும் மக்களிடம் அவ்வப்போது சொல்லும் ஒரு வார்த்தை "இரண்டு காரியங்கள் உங்களை தேவனுடைய மாபெரும் வாக்குத்தத்தங்களை நீங்கள் சுதந்தரிக்க உங்களை வழிநடத்தும். ஒன்று, உங்களுடைய பரிசுத்தம். அடுத்தது தேவன்பேரிலுள்ள உங்களது உறுதியான விசுவாசம்" என்று அவர் கூறுவார். "பின்னிட்டுத் திரும்பிப் பார்க்கும் மனிதன், தனது எண்ணங்களில் இரண்டு நினைவுகளால் குந்தி குந்தி நடக்கும் மனிதன், தனது செயல்களில் இரட்டை நிலைப்பாடுள்ள மனிதர்களுக்கு தேவனிடம் இடமே கிடையாது" என்றும் அவர் சொல்லுவார்.


அவரது மருமகன் ஜேம்ஸ் சால்டர் தனது மாமா விக்கிள்ஸ்வொர்த்தின் அதிக துணிச்சலான விசுவாசத்தைக் குறித்துக் கூறும்போது "நாங்கள் அவரது மாபெரும் உயிர் மீட்சிக் கூட்டங்களில் கலந்திருக்கின்றோம். அப்பொழுதெல்லாம் பயமும், நடுக்கமும் எங்களைப் பிடிக்கும். காரணம், அடுத்து அவர் என்ன செய்வார் என்பதை நாங்கள் எண்ணிப் பார்க்கவே அஞ்சுவோம். அந்த அளவிற்கு அவர் மனித புத்திக்கு அப்பாற்பட்ட விதத்தில் எல்லை கடந்து தேவனுக்காக செயலில் களம் இறங்குவார். எங்களுடைய தடுமாற்றமான விசுவாசத்தைக் காணும் அவர் எங்களிடம் எப்பொழுதும் கூறும் ஒரு காரியம் "நீங்கள் எண்ணுவது போல இன்னும் நீங்கள் ஆண்டவரோடு அத்தனை தூரம் விசுவாசத்தில் முன்னேறி வரவில்லை. சொல்லப் போனால் நீங்கள் விசுவாசப் பாதையில் இன்னும் போதுமான தூரம் கூட வந்து சேரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்" என்பார்.

ஒரு தடவை விக்கிள்ஸ்வொர்த் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது அவர் அருகில் இரண்டு பெண்கள் அமர்ந்திருந்தனர். அவர்களோடு அவர் பேசியபோது அவர்கள் இருவரும் தாயும், மகளும் என்பது தெரிய வந்ததுடன் அவர்கள் இருவருமே நோயால் அவதிப்படுபவர்கள் என்பதுவும் அவருக்கு தெரிய வந்தது.

"என்னிடம் எனது பைக்குள் உங்கள் இருவருடைய நோய்களுக்கான கைகண்ட மருந்து உண்டு. அதைச் சாப்பிட்டு வியாதி குணமாகாமல் போன எந்த ஒரு ஆளையும் நான் பார்க்கவில்லை" என்று தேவ மனிதர் அவர்களிடம் கூறினார். அவருடைய வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பெண்கள் இருவரும் அப்படியானால் அந்த மருந்தில் தங்களுக்குச் சாப்பிட ஒரு வேளை மருந்து தரும்படியாக விரும்பிக் கேட்டுக் கொண்டனர். உடனே அவர் பையைத் திறந்து தனது வேதாகமத்தை எடுத்து "நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்" (யாத் 15 : 26) என்ற தேவனுடைய வார்த்தையை அவர்களுக்கு வாசித்துக் காண்பித்தார். அந்த இருவரையும் தேவன் வெகு சீக்கிரமாகவே குணமாக்கினார்.

இங்கிலாந்தில் தெற்கு வேல்ஸ்ஸிலுள்ள கார்ட்டிஃப் என்ற இடத்திலுள்ள ஒரு அம்மாள் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தில் பயன்படுத்தக்கூடிய பயனுள்ள வைப்பிரதிகள் எவை என்று அவரிடம் ஒரு சமயம் கேட்டார்கள். அதற்கு அவர் மாறுத்தரமாக "மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் சுவிசேஷங்கள்" என்று பதிலளித்தார். மேற்கொண்டு அவர் அதை விரிவுபடுத்திக் கூறவில்லை.

ஒரு வாலிபன் ஒரு சமயம் அவரிடம் "நான் உறுதியாகப் பிடித்து நிற்பதற்கு தேவனுடைய ஒரு வாக்குத்தத்தம் எனக்கு கொடுங்கள்" என்று கேட்டான். உடனே அவர் தமது வேதாகமத்தை எடுத்துத் தரையிலே வைத்து அதின் மேல் அவனை காலூன்றி நிற்கச் சொன்னார். அவன் மிகுந்த தயக்கத்தோடு அதின் மேல் ஏறி நன்றான்.

"நீ இப்பொழுது திரளான வாக்குத்தத்தங்கள் மேல் நின்று கொண்டிருக்கின்றாய். அவைகள் ஒவ்வொன்றையும் உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்து ஏற்றுக் கொள்" என்று அந்த வாலிபனிடம் அவர் சொன்னார்.




"நாம் அனுசரிக்க வேண்டிய நான்கு சத்தியங்கள் உள்ளன. முதலாவது, தேவனுடைய வார்த்தைகளை நாம் கவனமாக வாசிக்க வேண்டும். இரண்டாவதாக, நாம் அவைகளை ஆழ்ந்து தியானித்து அவைகளை நாம் கிரகிக்க வேண்டும். மூன்றாவதாக, நாம் அவைகளை அப்படியே விசுவாசிக்க வேண்டும். நான்காவதாக, நாம் அவைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்" என்று அவர் சொல்லுவார். "வேதாகமத்தின் ஒரு பகுதியோ அல்லது முழு வேதாகமமோ எனது சட்டைப் பையில் போகாத வரை நான் முழுமையாக எனது ஆடைகளை அணிந்திருக்கின்றேன் என்று நான் எண்ணுவதே கிடையாது" என்று அவர் கூறுவார்.


மற்ற மக்கள் தங்கள் பிரயாணங்களில் ஒரு நாவலோ அல்லது ஒரு செய்தி தாளோ அல்லது ஒரு புத்தகமோ வைத்து வாசித்துக்கொண்டு போகையில் விக்கிள்ஸ்வொர்த் எப்பொழுதும் தேவனுடைய வார்த்தைகளையே வாசித்துக் கொண்டு செல்லுவார். அவர் ஒன்றை வாசிக்கின்றார் என்றால் அது தேவனுடைய வார்த்தையாக மாத்திரமே இருக்கும். "தேவனுடைய வார்த்தையானது முழுமையானதாகவும், இறுதியானதுமாகவும், நம்பத்தகுந்ததாகவும், எக்காலத்துக்கும் ஏற்புடையதாகவும் உள்ளது. எந்த ஒரு நிபந்தனையற்ற விதத்தில் நாம் அவைகளுக்கு சரணாகதி அடைந்து கீழ்ப்படிவதே தேவன் நம்மில் எதிர்பார்க்கும் காரியமாகும். வேதத்தில் ஒரு காரியம் எழுதப்பட்டிருக்கிறது என்றால் அதை அப்படியே ஏற்று அதற்கு கீழ்ப்படிந்து நடப்பதே நமது கடமையாகும்" என்று விக்கிள்ஸ்வொர்த் சொல்லுவார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.