ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் (1859 - 1947) 4
ஆத்துமாக்கள் மேல் வாஞ்சை கொண்ட தேவ பக்தன்
விக்கிள்ஸ்வொர்த் எந்த ஒரு வேதாகம கல்லூரியிலோ அல்லது தபால் மூலமாகவோ வேதசாஸ்திரம் படித்து பட்டம் பெற்றவர் அல்லர். அவர் சேர்ந்திருந்த மெதடிஸ்ட் திருச்சபையில் தேவ ஊழியத்துக்கு மக்களை தெரிந்தெடுப்பது அவர் வசம் உள்ள வேதாகம பட்டப்படிப்புகளை வைத்தல்ல, அவர் ஆண்டவருக்காக எத்தனை ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணினார் என்பதின் அடிப்படையில்தான் தேவ ஊழியத்துக்கு மக்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
விக்கிள்ஸ்வொர்த் ஆத்துமாக்கள் பேரில் மிகவும் பாரம் உடையவர். அவரும் அவரது மனைவி மேரி ஜேனும் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை இரவிலும் அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமை தேவன் அவர்களுக்கு 50 ஆத்துமாக்களை கொள்ளைப்
பொருளாக கொடுக்க வேண்டுமென்று கண்ணீரோடு ஜெபித்து வந்தார்கள். ஆண்டவரும் அப்படியே அவர்கள் ஆவலை நிறைவு செய்து வந்தார். தேவ மனிதர் 8 வயதிலேயே கர்த்தரின் இரட்சிப்பின் பாத்திரமாகி விட்டபடியால் இளம் பருவத்திலிருந்தே ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணும் பணியில் ஈடுபட்டுவிட்டார்.விக்கிள்ஸ்வொர்த் ஆத்துமாக்கள் பேரில் மிகவும் பாரம் உடையவர். அவரும் அவரது மனைவி மேரி ஜேனும் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை இரவிலும் அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமை தேவன் அவர்களுக்கு 50 ஆத்துமாக்களை கொள்ளைப்
ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணச் செல்லுவதானால் எந்த எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும், யார் யாரை சந்திக்க வேண்டும் என்ற விபரங்களை தனது ஆண்டவரிடம் கேட்டே அவர் செல்லுவார். அது அவருக்கு அற்புதமான அறுவடையைக் கொண்டு வந்தது. இப்படியாக அவர் சரியான இடத்தில், சரியான ஆத்துமாவை, சரியான நேரத்தில் சரியான தேவ வார்த்தையோடு சந்தித்தார். அவர் ஒரு சமயம் ஒரு நிகழ்ச்சியை கீழ்க்கண்டவாறு என்னிடம் கூறினார்:-
ஒரு சமயம் விக்கிள்ஸ்வொர்த் ஒரு ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அந்த ரயில் ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் வந்து நின்றது. அவர் சற்று வெளியே சென்று சற்று தூரம் நடந்து, உட்கார்ந்தே இருந்த அவர் தனது கால்களை நீட்டிவிட்டு சரிசெய்த பின்னர் திரும்பவும் தனது இருக்கைக்கு வந்தபோது ஒரு தாயும் அவளது மகளும் தனது இருக்கைக்கு அருகில் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த இளவயது பெண்ணைப் பார்த்து "நீங்கள் மிகவும் பரிதாபகரமாக காணப்படுகின்றீர்களே" என்று அவர் கேட்டார்.
"அந்தவிதமாக நான் காணப்படுவதற்கு தகுந்த காரணம் இல்லாமலில்லை. எனது காலை மருத்துவ மனையில் மருத்துவர்கள் வெட்டி எடுப்பதற்காக நான் சென்று கொண்டிருக்கின்றேன்" என்று அந்தப் பெண் மிகுந்த துயரத்தோடு பதில் கொடுத்தாள்.
"கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை இரட்சிக்கக்கூடும் என்பதை நீங்கள் அறியீர்களா?" என்று தேவ மனிதர் அவளிடம் கேட்டார்.
"நீங்கள் சொல்லுவது இன்னதென்றே எனக்குப் புரியவில்லையே" என்று அவள் மறுமொழி கொடுத்தாள்.
அதின் பின்னர் விக்கிள்ஸ்வொர்த் அந்தப் பெண்ணிடத்திலும் அவளது தாயிடத்திலும் இயேசு இரட்சகரைக் குறித்து விபரமாகப் பேசினார். ரயில் நீண்ட தூரம் போவதற்கு முன்னரே அவர்கள் இருவரும் ஆண்டவரைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டனர். அதின் பின்னர் அவர் அவர்களைப் பார்த்து "உங்கள் இருவருடைய ஆத்துமாவை இரட்சித்த அதே இரட்சகர் உங்களது சரீரத்தையும் பாதுகாத்து காப்பாற்றமாட்டாரா?" என்று கேட்டார். "ஆம்" என்று அந்த இளம் பெண் மலர்ந்த முகத்துடன் பதில் கொடுத்தாள்.
"மிகவும் நல்லது. நான் உங்களுக்காக இப்பொழுது ஜெபிக்கப் போகின்றேன்" என்று கூறி தன் வசம் இருந்த எண்ணெயை அவளது தலையில் பூசி இயேசுவின் நாமத்தில் உள்ளங்கசிந்து ஜெபித்தார். "இப்பொழுது நீங்கள் மருத்துவமனை சென்று உங்கள் காலை பரிசோதனை செய்ய மருத்துவரிடம் காண்பித்து எனக்கு காலை வெட்டி எடுக்க அவசியம் இல்லை" என்று கூறுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவருடைய வார்த்தைப் படியே அவள் செய்து அற்புதமான சுகம் பெற்றாள். தேவனுடைய திருவுள சித்தத்துடன் அவர் ஒன்றிணைந்து எத்தனை திட்டமாக செயல்பட்டார் பாருங்கள்!
ஒரு தடவை தன்னுடைய ஒரு கூட்டத்தில் தனது தள்ளு வண்டியில் வந்து கலந்து கொண்ட ஒரு நடக்க முடியாத அம்மாவைப் பார்த்து "உங்களுடைய மூட்டுகளில் ஏன் கம்பளி துணிகளைச் சுற்றியிருக் கின்றீர்கள்?" என்று தேவ மனிதர் கேட்டார்.
"எனது மூட்டுகளை சூடாக வைத்துக் கொள்ளுவதற்காகத்தான்" என்று அந்த அம்மா பதில் கொடுத்தார்கள். அந்தக் கம்பளி துணிகளை அநேக ஊக்குகளால் (Safety Pins) குத்தி அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்கள்.
"அந்த ஊக்குகளை எல்லாம் அப்புறப்படுத்துங்கள். இரும்புக் கடைக்காரர் கடையில் கூட இத்தனை ஊக்குகள் விற்பனைக்கு இருக்காது" என்று தேவ மனிதர் நகைச் சுவையுடன் கூறி அவைகளையும், கம்பளித் துணிகளையும் எடுக்கச் சொல்லிவிட்டு "உங்களுடைய தள்ளு வண்டியிலிருந்து வெளியே வாருங்கள்" என்று கூறினார்.
"என்னால் அது முடியவில்லையே" என்று அந்த அம்மாள் சொன்னார்கள்.
"உங்களுக்கு அது முடியுமா அல்லது முடியாதா என்று நான் உங்களிடம் கேட்கவில்லை. தள்ளு வண்டியிலிருந்து வெளியே வரத்தான் நான் உங்களிடம் கூறுகின்றேன்" என்று விக்கிள்ஸ்வொர்த் கூறினார். இப்பொழுது அந்த அம்மாள் எழுந்து நின்றார்கள்.
"இனி நடவுங்கள்" என்று சொன்னார்.
"எனக்கு நடக்க இயலாதே" என்று அந்த அம்மாள் கூறினார்கள்.
"நடக்க முடியுமா, முடியாதா என்பதை நீங்கள் பரிசோதித்துப் பார்க்க நான் உங்களிடம் சொல்லவில்லை. எனது வார்த்தைப்படி உங்கள் காலடிகளை எடுத்துவைத்து நடவுங்கள்" என்றார் அவர்.
"என்னால் அது கூடாது" என்று திரும்பவும் அவர்கள் கூறவே, தேவ மனிதர் அந்த அம்மாவுக்குப் பின்னால் வந்து அவர்களை சற்று முன்பாக தள்ளிவிட்டார். என்ன ஆச்சரியம், எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்கள் நடக்கத் தொடங்கினார்கள்.
பின்னர், விக்கிள்ஸ்வொர்த் ஜனக்கூட்டத்தினரைப் பார்த்து "உங்களில் எவராகிலும் தேவனிடமிருந்து ஏதாவது எதிர்பார்த்தால் முன்னால் எழுந்து வாருங்கள்" என்று கூறினார். அதைக் கேட்டதும் ஒரு மனிதர் எழுந்து தேவ மனிதரிடம் சென்றார்.
"உங்களுடைய காரியம் என்ன?" என்று அவர் கேட்டார்.
"எனக்குக் கடுமையான தொண்டை வியாதி. அதற்காக நான் அறுவை சிகிட்சை செய்து கொண்டேன். ஆனால், என்னால் கடந்த 11 ஆண்டு காலமாக கட்டியான உணவு பதார்த்தங்கள் எதுவும் சாப்பிட முடிவதில்லை" என்று அந்த மனிதர் பதில் கொடுத்தார்.
"அப்படியானால் மனிதரே, எப்படி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்?" என்று விக்கிள்ஸ்வொர்த் கேட்டார்.
"சாப்பிடும் எல்லா பதார்த்தங்களையும் திரவ பதார்த்தமாக மாற்றி கஞ்சாகத்தான் குடிக்கின்றேன்" என்று அந்த மனிதர் துயரத்தோடு பதில் கொடுத்தார்.
அந்த மனிதனுக்காக தேவ மனிதர் ஜெபிப்பதற்குப் பதிலாக "நீங்கள் வீட்டுக்குப் போய் உங்கள் மனைவியிடம் இன்று இரவு ஒரு கொழுமையான இரா விருந்தை ஆயத்தம் செய்யச் சொல்லி அதை ஆசை தீர சாப்பிடுங்கள். ஆனால், ஒரு காரியத்தை நான் உங்களிடம் எதிர்பார்க்கின்றேன். கர்த்தர் உங்களுக்கு இரங்கிச் செய்த அற்புதத்தை நாளை இராத்திரி கூட்டத்திற்கு இங்கு வந்து மக்களுக்கு முன்பாக சாட்சியாகச் சொல்ல வேண்டும்" என்று சொன்னார்.
விக்கிள்ஸ்வொர்த் சொன்னபடியே அந்த மனிதர் தனது வீட்டிற்குச் சென்று தனது மனைவியிடம் கட்டியான ஆகாரம் சமைக்கக் கூறி 11 (பதினொரு) ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு மன நிறைவான ஆகாரம் சாப்பிட்டு அடுத்த நாள் இரவு கூட்டத்திற்கு வந்து திரளான ஜனங்கள் முன்பாக தேவனுக்கு மகிமையாக சாட்சி கூறினார்.
விக்கிள்ஸ்வொர்த் இப்படியான வெகு தைரியமான மிகுந்த துணிச்சலான நடபடிகள் எடுத்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, அவர் இந்தக் காரியங்களை எல்லாம் தனது சுயமாக தனது மன விருப்பத்தின்படி செய்யாமல் கர்த்தருடைய ஆவியானவரிடமிருந்து அதைக் கேட்டே செய்தார். அடுத்தபடியாக இந்தக் காரியங்களை எல்லாம் வெறும் சரீர சுகத்தை மட்டும் மையமாக வைத்துச் செய்யாமல் ஆத்துமாக்களின் மனந்திரும்புதலை மாத்திரமே குறிக்கோளாக வைத்துச் செய்தார்.
ஒரு சமயம் விக்கிள்ஸ்வொர்த் ஸ்வீடன் தேசத்திற்குச் சென்றிருந்தபோது அவருடைய தேவச் செய்தியைக் கேட்கவும், வியாதிகளிலிருந்து சுகமடையவும் ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். அவர்களில் நூற்றுக்கணக்கானோர் இரட்சிப்பைக் கண்டடைந்தனர். ஸ்வீடன் அரசாங்க அதிகாரிகள் அவர் பணம் சம்பாதிக்கும் கோக்கத்தோடு வந்திருக்கின்றார் என்ற தவறான நோக்கத்துடன் அவரையும், அவரை ஸ்வீடன் நாட்டிற்கு அழைத்த அங்குள்ள 7000 சபை அங்கத்தினர்களைக் கொண்ட பிலதெல்பியா சபை பாஸ்டரையும் கைது செய்தனர். பின்னர், அப்படி கைது செய்ய இயலாது என்று அறிந்து அவர்களை விடுதலை செய்தனர். சுவிசேஷத்தை பிரசிங்கிப்போரை தடை செய்யக்கூடாது என்பது அந்த நாட்டின் சட்டமாக இருந்தது.
எனினும், மக்கள் சரீரத்தில் விக்கிள்ஸ்வொர்த் தனது கைகளை வைத்து ஜெபிக்கக்கூடாது என்று அரசாங்கம் தடை விதித்தது. அவருடைய அந்தக் கூட்டங்களில் 20000 மக்கள் வரை வந்து கலந்து கொண்டனர். அவர்களுக்கு அவர் பிரசிங்கித்துவிட்டு, அவர்களில் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க விரும்பினார். ஆனால், அரசாங்க உத்தரவின்படி மக்கள் சரீரத்தில் அவர் கை வைக்கக் கூடாது. தேவ ஆலோசனையின்படி, வியாதியஸ்தர்கள் யாவரையும் கூடிவரச் செய்து அவரவர் தங்கள் சரீரத்தில் வியாதியுள்ள இடங்களில் கை வைத்துக் கொள்ளும்படியாக கேட்டுக் கொண்டு அவர்களுக்காக ஜெபிக்கத் தொடங்கினார். அவ்வளவுதான், தேவனுடைய வல்லமை வியாதியஸ்தர்கள் மேல் இறங்கிற்று. அநேக நூற்றுக்கணக்கானோர் அற்புத சுகம் பெற்றனர். அற்புத அடையாளங்கள் நடைபெற்றன. எந்த ஒரு அரசாங்கமோ அல்லது அதிகாரமோ ஆவியானவருடைய அசைவாடுதலை தடைசெய்ய இயலாமற் போய்விட்டது.
அவருடைய ஒரு பெரிய எழுப்புதல் கூட்டத்திற்கு திரளான மக்கள் வந்திருந்தனர். தேவ செய்திக்குப் பின்னர் வியாதியஸ்தர்கள் தங்களுடைய சுகத்தைப் பெற்றுக் கொள்ளும்படியாக விக்கிள்ஸ்வொர்த் அமர்ந்திருந்த முன் மேடைக்கு வரும்படியாக அழைக்கப்பட்டனர். ஏராளமான மக்கள் மேடைக்கு எழுந்து சென்றனர். அதில் அநேகம் இளம் பெண்களும் இருந்தனர். அவர்களில் ஒரு குறிப்பிட்ட வாலிபப் பெண்ணை அவர் பார்த்து "நீ போ, இனி பாவம் செய்யாதே. தேவன் உன்னை குணமாக்குவார்" என்று கூறி அனுப்பிவிட்டார். அவள் ஒரு விபச்சார வாழ்க்கை கொண்ட பெண்ணாக இருந்தாள். அவளுடைய பாவத்தை கூட்டத்தினருக்கு முன்னர் கூறி அவளை அவமானப்படுத்த விரும்பாமல் அப்படிச் சொன்னார். அடுத்த நாளும் அதே பெண் பெருங்கூட்டத்தோடு கூட்டமாக தனது சுகத்திற்காக மேடைக்கு எழுந்து சென்றாள். அந்த திரள் கூட்டத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்த பார்வையிலேயே "நேற்று இரவில் "நீ போ, இனி பாவம் செய்யாதே, தேவன் உன்னை குணமாக்குவார்" என்று கூறினேன். "வெளியே போய்விடு" என்று கூறிவிட்டார். கொடிய பாவங்களைச் செய்துகொண்டு தங்கள் சரீர சுகங்களைத் தேடி வரும் மக்களுக்கு அவர் பரம விரோதியாக இருந்தார். அந்த தெய்வீக சுகம் இன்னும் அவர்கள் தங்கள் பாவங்களில் நிலைத்திருக்க வழிசெய்யும் என்று தேவ மனிதர் அஞ்சினார் போலும்!
ஜேம்ஸ் சால்டர் என்ற அவருடைய மருமகன் தனது மாமா விக்கிள்ஸ்வொர்த்துடனான தனது அனுபவம் ஒன்றைக் கீழ்க்கண்டவாறு பகிர்ந்து கொள்ளுகின்றார்கள்:-
"ஒரு தேவ ஊழியத்தின் நிமித்தமாக நாங்கள் இருவரும் லண்டன் பட்டணத்திற்கு ரயிலில் வந்து அங்கிருந்து நாங்கள் போய்ச் சேர வேண்டிய இடத்துக்கு கிங்ஸ் கிராஸ் ஸ்டேஷனில் பஸ் பிடித்தோம். அந்தப் பேருந்தில் 2 இருக்கைகள் தான் காலியாக இருந்தன. அவர் என்னை காலியாக இருந்த பின் இருக்கையில் உட்காரச் சொல்லிவிட்டு அவர் முன் இருக்கையில் போய் உட்காரப் போன அவர் பிரயாணிகளுக்கு மத்தியில் எழுந்து நின்றவராக தனது புதிய ஏற்பாட்டைத் திறந்து "இதின் வார்த்தைகளைக் கவனித்துக் கேளுங்கள்" என்று கூறிவிட்டு அதில் ஒரு பகுதியை வாசித்துவிட்டு அதின் விளக்கத்தை அவர்களுக்குச் சொல்ல ஆரம்பித்தார். அதைக் கேட்ட பேருந்து பிரயாணிகள் பாவ உணர்வடைந்து அழ ஆரம்பித்தார்கள். பரிசுத்த ஆவியானவரின் ஒரு பெரிய அசைவு அந்தப் பேருந்தில் உண்டாயிற்று. அதைத் தொடர்ந்து அவர் பயணிகளின் மேல் தனது கரங்களை வைத்து ஜெபித்தார். ஒரு பொது ஜனப் பேருந்தில் யாரால் இப்படிப்பட்ட செயலை செய்யக்கூடும்? தன்னுடைய தேவனாகிய கர்த்தர் அவரோடு இருந்தமையால் அவர் ஒரு அஞ்சாத சிங்கமாகவே காணப்பட்டார்".
மற்றொரு தடவை விக்கிள்ஸ்வொர்த் லண்டன் பட்டணம் செல்லுவதற்காக பிராட்ஃபோர்ட் என்ற இடத்தில் ரயில் ஏறினார். தேவ ஆவியானவரின் நடத்துதலின்படி ரயில் பெட்டியில் ஒரு மூலையான இடத்தைத் தெரிந்து கொண்டு அதில் அவர் உட்கார்ந்தார். அந்தப் பெட்டியில் அவருடன் ஐந்து பிரயாணிகள் இருந்தனர். அவர் தனது வழக்கப்படி தன்னுடைய புதிய ஏற்பாட்டைத் திறந்து வாசித்துவிட்டு அமைதியாக தனக்குள்ளாகவே ஜெபித்தார். தன்னோடு பயணம் செய்து கொண்டிருக்கும் அந்த சக பயணிகளிடம் அவர் ஒரு வார்த்தை கூட வாய் திறந்து பேசவில்லை. லண்டன் பட்டணத்தை ரயில் எட்டிப்பிடிக்க இன்னும் 30 மைல்கள் தூரமே இருக்கும் வேளையில் அவர் ரயிலிலுள்ள ஓய்வு அறைக்குச் சென்றார். அங்கு சென்றுவிட்டு அவர் தனது இருக்கைக்கு திரும்பவும் வந்தபோது அவரது இருக்கைக்கு அருகில் உட்கார்ந்தருந்த மனிதன் விக்கிள்ஸ்வொர்த்தைப் பார்த்து "என்னை அறியாமலே ஒரு வித பயம் என்னை ஆட்கொண்டிருக்கின்றது. அது என்னவென்றே எனக்குத் தெரியவில்லை. நான் மரிக்கப்போகின்றேன் என்ற எண்ணம் என்னில் மேலோங்கி நிற்கின்றது" என்று கூறினான். மற்ற 4 பயணிகளும் தங்களுக்கும் அதுவேதான் அனுபவம் என்று சேர்ந்து கூற அந்த தேவ மனிதர் பாவ உணர்வையும், மனந்திரும்புதலையும், இரட்சண்யத்தையும் மிகவும் விபரமாக அவர்களுக்கு விளக்கிக் கூறினார்.
விக்கிள்ஸ்வொர்த்தும் அந்த ஐந்து பேரும் அவர்கள் பயணம் செய்து வந்த ரயில் பெட்டியிலேயே முழங்காற்படியிட அங்கேயே அவர்கள் ஐவரும் இரட்சிப்பின் பாத்திரங்களானார்கள். இப்படிப்பட்ட ஆத்தும ஆதாய அனுபவங்கள் தேவ மனிதருக்கு நிறைய உண்டு.
விக்கிள்ஸ்வொர்த் எதை எல்லாம் செய்தாரோ அவைகளை எல்லாம் தனது அருமை இரட்சகர் இயேசுவின் மேல் அன்பு பொங்கி செய்தார். மக்களின் ஆரவார புகழ்ச்சி அல்லது ஏதாவது பிரதிபலன் எதிர்நோக்கி அவர் அவைகளை ஒருக்காலும் செய்யவில்லை. குழந்தைகள் பால் அவருக்கு மாபெரும் அன்பு இருந்தது. அந்த அன்பை இங்கிலாந்திலுள்ள குழந்தைகள் கண்டு கொள்ள நீண்ட காலம் பிடிக்கவில்லை. இங்கிலாந்திலுள்ள லிவர்பூல் துறைமுகம் அந்த நாட்களில் ஒரு பெரிய துறைமுகமாக இருந்தது. விக்கிள்ஸ்வொர்த் அந்த துறைமுகப் பட்டணத்துக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளை ஒன்று கூட்டி அவர்களுக்கு இயேசு இரட்சகரைக் குறித்துப் பேசுவார். அந்தக் குழந்தைகளில் அநேகர் ஏழைகளானதால் அவர் தமது பணத்தில் பெரும் பகுதியை அவர்களுடைய நல்வாழ்வுக்காக செலவிட்டார். அவர்களில் நூற்றுக்கணக்கானவர்களை அவர் கிறிஸ்துவுக்குள்ளாக வழிநடத்தினார்.
தனது தேவ ஊழியங்களின் மூலமாக உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆத்தும இரட்சிப்பையும், சரீர சுகத்தையும் தேவன் மூலமாக வாங்கிக் கொடுத்த அவர் வெளிநாட்டு மிஷன் ஊழியங்களுக்கு மிகவும் தாராளமாக வாரி வழங்கினார். ஆப்பிரிக்கா தேசத்திலுள்ள "காங்கோ சுவிசேஷ மிஷன் ஸ்தாபனம்" அவரது உள்ளத்திற்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அதற்கு அவர் ஏராளமாகக் கொடுத்தார். அந்த ஸ்தாபனத்தை அவரது மருமகன் ஜேம்ஸ் சால்ட்டரும், பர்ட்டன் என்பவரும் ஆரம்பித்திருந்தார்கள். அதற்கு இன்று 4000 சபைகள் உண்டு.
விக்கிள்ஸ்வொர்த்தின் ஆத்தும ஆதாயத்தின் இரகசியம் அவர் எப்பொழுதும் தேவனுடைய சிங்காசனத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்ததுதான். வேதசாஸ்திரத்தின் அடிப்படையில் ஆத்துமாக்களோடு வாதம் செய்ய அவருக்கு நேரம் கிடையாது. அவருடைய ஒரே குறிக்கோள் இழந்து போனதை தேடுவதுதான். ஆத்தும ஆதாயத்தில் தேவனுடைய வழிகாட்டுதலும் அவருடைய சித்தமும் என்ன என்பதை தேடிக் கண்டு பிடிப்பதே விக்கிள்ஸ்வொர்த்தின் கதறுதலாக இருந்தது. மற்ற தேவ ஊழியர்கள் ஆத்தும ஆதாயத்தில் கையாளுகின்ற மனுஷ ஞானத்திற்குரிய உபாயங்களும், நுணுக்கங்களும் அவருக்கு பிடிக்காத காரியங்களாகும். ஆத்தும ஆதாயத்தில் ஆண்டவருடைய ஒத்தாசையை மாத்திரம் அவர் தேடியதால் அவருக்கு ஆத்துமாக்கள் அவர் விரும்பிய வண்ணமாக கிடைத்தனர். தேவனும் தம்முடைய தாசனின் மேலான நோக்கத்தை கனம் பண்ணினார்.
சாலொமோன், இஸ்ரவேலிலே ராஜாவாக சிம்மாசனம் ஏறியபோது "உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும் அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்" (1 இரா 3 : 9) என்று தேவனிடம் கேட்டான். "ஞானமுள்ள" (Understanding) என்ற வார்த்தைக்கு எபிரேய பாஷையில் "கேட்கின்ற அல்லது கவனிக்கின்ற" என்பதுதான் அர்த்தமாகும். ஆத்தும ஆதாயத்தில், மாபெரும் தேவ மனிதர் ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த்தின் இதயத்தின் கதறுதலும் ஒரு துளிதானும் பிசகாமல் அப்படியேதான் இருந்தது. ஆண்டவரின் சத்தம் கேட்டு அவருடைய திருவுள சித்தம் செய்தார்.
"என் பின்னே வாருங்கள், நான் உங்களை மனுஷர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன்" (மத் 4 : 19) என்று ஆண்டவர் சொன்ன வார்த்தைகள் ஆத்தும ஆதாய வெற்றிக்கான அடிப்படை அஸ்திபாரம் என்று விக்கிள்ஸ்வொர்த் கூறுவார். "என் பின்னே வாருங்கள்" என்ற வார்த்தையின் பொருள் "பரிசுத்த கர்த்தராகிய என்னைப் போலாகுங்கள்" (Be like me) என்பதாகும். "நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் போலாகிவிட்டால் நம்மைப் பார்ப்போர் எளிதாக அவரிடம் வந்து விடுவார்கள்" என்று அவர் சொல்லுவார். தன் ஆண்டவரைப் போல மாற்றம் பெற்ற விக்கிள்ஸ்வொர்த்தின் தேவ ஊழியம் மனுப்புத்திக்கு அப்பாற்பட்ட விதத்தில் அற்புதங்களை நடப்பித்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
