யோவான் 16 விளக்கவுரை

யோவான் 16 விளக்கவுரை

யோவான் 16:1-3
1 நீங்கள் இடறலடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். 2 அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங்காலம் வரும். 3 அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்.

தம்முடைய சீஷர்கள் மூன்று காரணங்களுக்காக வெறுக்கப்படுவார்கள் என்று இயேசு அவர்களுக்கு அறிவித்தார்:
அவர்கள் உலகத்தினால் பிறக்காமல் இறைவனால் பிறந்த காரணத்தினால்.
கிறிஸ்து இறைவனுடைய மகன் என்றோ அவருடைய சாயல் என்றோ மனிதர்கள் உணர்ந்துகொள்ளாத காரணத்தினால்.
அந்த மதவெறியர்கள் உண்மையான இறைவனை அறியாமல், தாங்கள் அறியாத அந்தகாரத்தின் தெய்வத்தை அவர்கள் வணங்குவதால்.
நரகத்தின் வெறுப்பு தொடருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய இறைவனிடத்தில் திரும்புகிற எவரையும் அவர்கள் எங்கிருந்தாலும் மதவெறியர்களால் கொல்லப்படுகிறார்கள். அந்த மதவெறியர்கள் அவர்களைக் கொல்லும்போது தாங்கள் இறைவனுக்குச் சேவை செய்வதாக நினைப்பார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் பிசாசுக்குத்தான் ஊழியம் செய்கிறார்கள். உண்மையான இறைவன் பரிசுத்த பிதா என்பதை அவர்கள் அறியார்கள். அவர்கள் கிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமையை அனுபவிக்கவில்லை. அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில்லை. ஆகவே, பரிசுத்த திரித்துவத்தை பிரதிபலிப்பவர்களை உபத்திரவப்படுத்தி, கொலைசெய்து, பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி அழிக்கும்படி, ஒரு அந்திய ஆவி அவர்களை வழிநடத்துகிறது. யூதர்கள் அப்படித்தான் செய்தார்கள், கிறிஸ்து மீண்டும்வரும்வரை இவ்விதமாக நடைபெறும்.
மனிதர்களுடைய அறிவு பெருத்துப்போவதால் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும் என்று கற்பனை செய்யாதீர்கள். பரத்திலிருந்து வரும் ஆவி மற்றும் பாதாளத்திலிருந்து வரும் ஆவி ஆகிய இந்த இரண்டு ஆவிகளும் இந்த உலகத்தின் முடிவுவரை ஒன்றை ஒன்று எதிர்த்துப் போராடிக்கொண்டே இருக்கும். பரலோகத்திற்கும் நகரத்திற்கும் இடையில் எந்தப் பாலமும் கிடையாது. ஒன்று நீங்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் ஐக்கியத்திற்குள் நுழைவீர்கள். அல்லது நரகத்தின் கட்டுக்குள்ளும் அக்கிரமத்தின் சிறைக்குள்ளும் விழந்துபோவீர்கள். நீங்கள் இயேசுவைப் பின்பற்றுவீர்களானால், உங்களுடைய சாட்சியினாலே பிதாவை மகிமைப்படுத்தும்படி, அன்புள்ள நபராக மாறிவிடுவீர்கள். மாறாக, நீங்கள் அவருடைய பிள்ளையாகவில்லை என்றால், மற்ற ஆவிகளுடனும் சிந்தனைகளுடனும் கட்டப்பட்டவர்களாகவே நிலைத்திருந்து, இறைவனுடைய எதிரியாக மாறிவிடுவீர்கள்.
நீங்கள் அவரில் உண்மையாக நிலைத்திருந்தால், உங்களுக்கு அவர் அருளும் புத்திர சுவிகாரத்தின் விலை என்ன என்பதை இயேசு உங்களுக்கு நினைப்பூட்டுகிறார். நரகம் கிறிஸ்துவுக்கும் அவரைப் பின்பற்றுவோருக்கும் எதிராக தனது செயல்களை நடப்பிக்கும்போது உங்கள் எதிர்காலம் கடினமானதாகவும் வலியுள்ளதாகவுமே இருக்கும். இயேசுவை உண்மையாகப் பின்பற்றுவோர் அனைவரையும் உலகம் எதிர்க்கிறது. ஆகவே, ஒன்று நீங்கள் பிதாவை இறைவனாகப் பெற்று இவ்வுலகத்தில் அந்நியராக வாழ வேண்டும். அல்லது இறைவனுக்கு எதிரியாகி இவ்வுலகத்தின் வரவேற்பைப் பெற வேண்டும். எனவே, வாழ்வா நித்திய மரணமா எதைத் தெரிவுசெய்யப்போகிறீர்கள்.

. வரலாற்றின் முக்கியமான வளர்ச்சியைப் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்துகிறார் (யோவான் 16:4-15)


யோவான் 16:4-7
4 அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேனென்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நான் உங்களுடனேகூட இருந்தபடியினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை. 5 இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. 6 ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது. 7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
ஆரம்பத்தில் பாடுகளையும், துயரத்தையும், உபத்திரவங்களையும் பற்றி தம்முடைய சீஷர்களுக்கு அறிவிக்கவில்லை. மாறாக வானங்கள் திறக்கப்படுவதையும் மனுஷகுமாரன் மீது தேவதூதர்கள் ஏறுவதையும் இறங்குவதையும் அவர்கள் காண்பார்கள் என்பதை அறிவித்தார். இயேசு அற்புதங்களைச் செய்யும்போது, அவர்கள் இறைவனுடைய வல்லமையைப் பார்த்து சந்தோஷப்பட்டார்கள். மதவெறியர்கள் சிறிது சிறிதாக அவரைக் குறித்து தங்கள் மனதைக் கடினப்படுத்தினார்கள். மக்கள் கூட்டமும் யூதர்களுக்குப் பயந்து அவரைவிட்டு விலகினார்கள். சீஷர்களைத் தவிர மற்ற அனைவரும் அவரைவிட்டு விலகிவிட்டார்கள். இப்போது அவர்களை விட்டுவிட்டு அவர் பரலோகத்திற்கு தம்முடைய பிதாவிடம் செல்லப்போகிறார். அப்போது அவர் உபத்திரவத்தையும் மரணத்தையும் பற்றி அவர்களுடன் பேசினார். அது அவர்களை இன்னும் துக்கப்படுத்தியது. தங்களை எதிர்காலத்தில் உற்சாகப்படுத்தக்கூடிய எந்த நோக்கத்தையோ காரணத்தையோ அவர்களால் பார்க்க முடியவில்லை. ஆனாலும் இயேசு தம்முடைய சொந்த வலியைப்பற்றியோ, தாம் அனுபவிக்கப்போகும் சித்திரவதைகளைப் பற்றியோ மரணத்தைப் பற்றியோ எதுவும் பேசவில்லை என்பதை அவர்கள் கவனித்தார்கள். அவர் தம்முடைய பிதாவினிடத்தில் போவதைக் குறித்து, அதனால் ஏற்படும் நன்மைகளைக் குறித்தே அவர்களிடம் பேசினார். “நீர் எங்கே போகிறீர்?” என்று அவர்கள் கேட்டார்கள். அவர் தங்களைவிட்டுப் பரமேறிப் போகக்கூடாது என்றும் தங்களுடனேயே தங்கிவிட வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இயேசு, தாம் அவர்களை விட்டுப் பிரிய வேண்டியது அவசியம் என்றும் சிலுவையில்லாமல் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படமாட்டார்கள் என்றும் அவர்களுக்கு விளக்கினார். இறைவன் மனிதனோடு ஒப்புரவாகுதலின் மூலமாகவும், இறைவனுடைய ஆட்டுக்குட்டியின் பதிலாள் மரணத்தினால் பாவப்பரிகாரம் செய்யப்படுதலின் மூலமாகவும் மட்டுமே இறைவனுடைய வல்லமை அவருடைய சீஷர்கள் மீது பொளிந்தருளப்பட முடியும். இறைவனுடைய ஜீவனும் அன்பும் அவர்கள் மீது பொழிந்தருளப்படும்படியாக இயேசு அனைத்து நீதிகளையும் நிறைவேற்றியிருந்தார். இயேசுவின் மரணமே புதிய உடன்படிக்கையின் ஆதாரமாயிருந்து இறைவனோடு நீங்கள் ஐக்கியம் கொள்ளும் உரிமையை உங்களுக்குத் தருகிறது. பரிசுத்த ஆவியானவர் அதை உங்களுக்குக் கொடுத்து உங்களை ஆறுதல்படுத்தி, இறைவன் உங்களோடும் உங்களுக்குள்ளும் இருக்கிறார் என்பதை உறுதிசெய்கிறார்.
யோவான் 16:8-11
8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். 9 அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும், 10 நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், 11 இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
பரிசுத்த ஆவியானவர் சீஷர்களை ஆறுதல்படுத்த முடியும். ஏனெனில் இந்தக் கொள்கைகளின் அடிப்படையில் அவர் விசுவாசிகளுடைய கண்களைத் திறந்து, அவிசுவாசிகளுடைய இருதயத்தை நியாயம்தீர்க்கிறார்.
ஆவியானவர் பாவத்தின் அர்த்தத்தையும் அது எவ்வளவு பயங்கரமானது என்பதையும் நமக்குப் போதிக்கிறார். கிறிஸ்துவினுடைய வருகைக்கு முன்பாக பாவம் என்பது நியாயப்பிரமாணத்தை மீறுவதாகவும் இறைவனுடைய சித்தத்தை நிறைவேற்றத் தவறுவதுமாகவே இருந்தது. அது இறைவனுக்கு விரோதமாக கலகம் செய்வதாகவும் அவரை நேசிக்காமலும் நம்பாமலும் இருப்பதாகவும் கருதப்பட்டது. அதாவது பாவம் என்பது இறைவனின்றி அவருக்கு எதிராக வாழும் வாழ்க்கையாகும். ஒழுக்க ரீதியான, சமூக ரீதியான மற்றும் ஆவிக்குரிய ரீதியான பாவங்கள் அனைத்தும் இறைவனுடைய மகத்துவத்தை மீறுவதாகவே கருதப்பட்டது. சிலுவைக்குப் பிறகு இந்த அர்த்தங்களுடன் கிறிஸ்துவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள மறுத்தல் அல்லது இறைவனுடைய இலவசமான கிருபையைப் புறக்கணித்தல் என்பதும் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இயேசுவின் இலவசமான பாவமன்னிப்பைப் புறக்கணிக்கும் எவரும் பரிசுத்தருக்கு விரோதமாக இறைநிந்தனை செய்கிறார்கள். இறைவன் பிதா என்றும் இயேசு அவருடைய குமாரன் என்றும் விசுவாசிக்காதவர்கள் பரிசுத்த திரித்துவத்தின் எதிரிகளாயிருக்கிறார்கள். இறைவன் அன்பாகவே இருக்கிறார். யாரெல்லாம் கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த அன்பைப் புறக்கணிக்கிறார்களோ அவர்கள் இரட்சிப்பை இழந்துபோகும் மரணத்திற்கு ஏதுவான பாவத்தைச் செய்கிறார்கள்.
சிலுவையில் இயேசு உலகத்திற்கான இரட்சிப்பை நிறைவேற்றி முடித்தார். அவர் மறுபடியும் மரிக்க வேண்டிய தேவையில்லை, ஏனெனில் எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் உள்ள மக்களுடைய பாவங்களை அவர் சிலுவையில் மன்னித்து விட்டார். கிருபையினால் இயேசுவின் இரத்தத்தில் எல்லாரும் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். அவர் ஒரு பிரதான ஆசாரியனைப் போல மூன்று நிலைகளில் தம்முடைய ஊழியத்தை நிறைவேற்றுகிறார். ஒன்று, பலியாக வேண்டிய நபர் கொல்லப்படுதல். இரண்டாவது, இறைவனுக்கு முன்பாக பாவப்பரிகாரம் செய்யப்படுவதற்காக மகாபரிசுத்த ஸ்தலத்தில் இரத்தம் தெளிக்கப்படுதல். மூன்றாவது, ஆசீர்வாதத்திற்காகக் காத்திருக்கும் பெருமெண்ணிக்கையான மக்கள் மீது ஆசீர்வாதங்களைப் பொழிதல். இவையனைத்தையும் இயேசு செய்தார். இந்தப் பலியின் மூலமாக நாம் நீதிமான்கள் என்பதை உறுதிப்படுத்தும்படி பரிசுத்த ஆவியானவரின் ஆசீர்வாதத்தை அவர் பொழிந்தருளுகிறார். சிலுவையில் தொடங்கப்பட்ட நம்முடைய நீதிமானாக்கப்படுதலை அவர் தமது உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுகையினால் நிறைவாக்குகிறார்.
உலகம் நியாயந்தீர்க்கப்படுதலின் நோக்கதை அவிசுவாசிகள் நரகத்தில் தள்ளப்படுவதாக மட்டும் இயேசு பார்க்கவில்லை. சாத்தானையும் அவனுடைய அடிமைத்தனத்தையும் முற்றிலும் அழித்து அதற்கு ஒரு முடிவுகட்டுவதாகவே இயேசு நியாயத்தீர்ப்பைப் பார்த்தார். இறைவனுடைய அன்பின் ஐக்கியத்திலிருந்து மனிதர்களைப் பிரிப்பவன் சாத்தானே. அவன் அவர்களை வெறுப்பின் சங்கிலிகளினால் கட்டி, பேய்தனமான சதித்திட்டங்கள் நிறைந்த பிசாசின் பிள்ளைகளாக மாற்றுகிறான். ஆனால் இயேசுவோ இவ்வுலகத்தில் வாழ்ந்தபோது, மனத்தாழ்மையாக நடந்துகொண்டு, வஞ்சகனுடைய பெருமையை கண்டித்தார். குமாரனுடைய அன்பு பொல்லாங்கனுடைய ஆயுதங்களைக் களைந்து அவனை நிராயுதபாணியாக்கியது. இயேசு தம்முடைய ஆவியைப் பிதாவின் கரங்களில் ஒப்புக்கொடுத்தபோது, சாத்தான் பரப்பிவந்த இருளை மேற்கொண்டார். அவர் சிலுவையில் பெலவீனமாகக் காணப்பட்டதன் மூலமாக அவர் சாத்தானை மேற்கொண்டார். அவர் மரணம்வரை உண்மையுள்ளவராக இருந்தபடியால் சாத்தானை வென்று அவனை அழித்தார். அவருடைய வெற்றி செயல்படும் காலத்தில் நாம் வாழ்கிறோம். நாம் இறைவனால் பாதுகாக்கப்பட்டு, இரட்சிப்பின் உறுதியை கிறிஸ்துவின் வெற்றியினால் பெற்றுக்கொண்டதால்தான் “நீர் எங்களை சோதனையில் பிரவேசிக்கப்பண்ணாமல், தீமையினின்று இரட்சித்துக்கொள்ளும்” என்று நாம் விண்ணப்பிக்கக்கூடியவர்களாயிருக்கிறோம்.

யோவான் 16:12-13
12 இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். 13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
இயேசு சகலத்தையும் அறிந்தவர். அவர் தமக்குப் பிரியமான சீஷர்களுக்கும் பரலோகத்தின் இரகசியங்களையும் எதிர்காலத்தையும் பற்றி தெரியப்படுத்த விரும்பினார். ஆனால் அவர்களுடைய ஆத்துமாக்களும் சிந்தைகளும் அப்படிப்பட்ட ஆழ்ந்த சத்தியங்களை முழுமையாக புரிந்துகொள்ள இயலாதவைகளாயிருந்தன. பரிசுத்த ஆவியானவருடைய ஒளியூட்டுதல் நமக்கு அருளப்படாவிட்டால் ஒரே நேரத்தில் இயேசு எப்படி பிதாவின் வலதுபக்கத்திலும் நம்முடைய இருதயத்திலும் வாழமுடியும் என்பதை நம்முடைய தர்க்கரீதியான அறிவினால் புரிந்துகொள்ள முடியாது. அதுபோலவே ஒரே இறைவன் மூன்று நபர்களில் வாழ்கிறார் என்ற உண்மையையும் இயற்கையாக நம்மால் புரிந்துகொள்ள முடியாது. மனித மூளையால் இதைப் புரிந்துகொள்ள முடியாதிருக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இயலாமையில் நமக்குத் துணைசெய்து, நம்முடைய சிந்தைகளுக்கு ஒளியூட்டுகிறார். அவர் எதிர்காலத்தின் இரகசியங்களையும் மறைக்கப்பட்ட இருதயத்தின் நினைவுகளையும் நமக்கு வெளிப்படுத்திக் காண்பிக்கிறார், ஏனெனில் அவர் பரிசுத்த திரித்துவத்தின் இரகசியத்தை அறிந்திருக்கிறார்.
சத்திய ஆவியானவர் வந்து அவர்களைச் சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார் என்று கிறிஸ்து ஏற்கனவே சொல்லியிருந்தார். சத்தியம் என்றால் என்ன? இயேசு உலகத்திலுள்ள தகவல்களைப் பற்றி விவரிக்கும் விதமாக அவர் “சத்தியங்கள்” என்று பன்மையில் பேசாமல் “நானே சத்தியம்” என்று ஒருமையில் பேசினார். பரிசுத்த ஆவியானவர் வந்து நமக்குக் கொடுக்கப்போகும் வெளிப்பாடானது நமது தன்மையிலும் செயலிலும் கிறிஸ்துவின் முழுமைக்குள் நம்மை நடத்துவதாக இருக்கும். இயேசு ஒரு சாதாரண மனிதனல்ல என்பதால் அவர் பிதாவிலும் பிதா அவரிலும் இருக்கிறார்கள். சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்தப்படுதல் என்பது பிதாவைக் குறித்த அறிவையும் அவரோடு நிலைத்திருந்து என்றென்றும் அவரோடு வாழ்வதைக் குறிக்கிறது. இந்த நற்செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள “சத்தியம்” என்ற வார்த்தை சட்டரீதியான, தர்க்கரீதியான அல்லது ஒழுக்கரீதியான உண்மை ஆகியவற்றை மட்டும் குறிக்காமல், பரந்த நிலையில் குறிப்பான மற்றும் பொதுவான அனைத்து உண்மைகளையும் உள்ளடக்கும் வார்த்தையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே நாம் பரிசுத்த திரித்துவ இறைவனை அறியும்படியாகவும் அவருடைய அற்புதமான வல்லமைகளை அனுபவிக்கும்படியாகவும் பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பரலோக சத்தியங்களுக்குள் நம்மை வழிநடத்துகிறார்.
இவையனைத்திலும் பரிசுத்த ஆவியானவர் பேசுகிற, கவனிக்கிற, சுயாதீன சித்தமுள்ள ஒரு சுதந்திரமான நபராயிருக்கிறார். ஆனால் அவர் அதேவேளையில் பிதாவின் சித்தமில்லாமல் எதையும் செய்கிறதில்லை. அவர் புதிய சிந்தனைகளை முன்வைக்காமல் பிதா அவருக்குச் சொல்லியவைகளையே நமக்கு எடுத்துச் சொல்லுகிறார். பரிசுத்த திரித்துவத்தைப் பொறுத்தவரை அன்பினால் ஏற்படும் சுதந்திரத்தில் மூவரும் ஒருவருக்கொருவர் தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள். இவ்வாறு கிறிஸ்துவின் மணவாட்டியாகிய திருச்சபையானது அவருடைய வருகையில் பரிபூரணமானதாக நிற்கும்படி அதைக் கட்டியெழுப்ப விரும்புகிறார்.
யோவான் 16:14-15
14 அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். 15 பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.
பரிசுத்த ஆவியானவரின் பணிக்குப் பின்னாலுள்ள நோக்கம் கிறிஸ்துவின் மகிமையே. இயேசு எவ்விதமாக தம்மை வெறுத்து அனைத்து மகிமையையும் பிதாவுக்கே செலுத்தினாரோ, அதேபோல பரிசுத்த ஆவியானவரும் தம்மை மகிமைப்படுத்தாமல் தம்முடைய அனைத்துச் செயல்களிலும் கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறார். இதன் மூலம் நாம் நம்முடைய அனுபவங்கள், வெற்றிகள் அல்லது செயல்களைப் பற்றிப் பேசாமல், இரட்சகராகிய இயேசுவை மட்டுமே மகிமைப்படுத்த வேண்டும் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். நம்முடைய மனமாற்றம் அல்ல, இயேசுவின் இரத்தத்தினால் நம்முடைய பாவங்கள் கழுவப்படுவதே முக்கியமானது. நம்மையே தமக்காக விலைகொடுத்து வாங்கிய இயேசுவை மகிமைப்படுத்துவதே பரிசுத்த ஆவியானவரின் அசைவுகளுக்கும் வல்லமைகளுக்குமுள்ள ஒரே நோக்கமாகும். சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்த இயேசுவைக் குறித்து அப்போஸ்தலர்கள் சாட்சிகொடுத்தபோது, அவர்களுடைய சாட்சியின் மூலமாகப் பரிசுத்த ஆவியானவர் செயல்படுகிறார்.
பரிசுத்த ஆவியானவர் தானாக எதையும் செய்யாமல், இயேசு வார்த்தையிலும் செயலிலும் எதை ஆரம்பித்தாரோ அதை நிறைவேற்றி முடிக்கிறார். அவர் இயேசுவின் வார்த்தைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, அவருடைய ஜீவனை அவர்களில் தெளிவுபடுத்துகிறார். அவர்கள் தங்கள் இரட்சகரில் ஊன்றப்பட்டவர்களாக அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி அவர்களை ஊக்குவிக்கிறார். பரிசுத்த திரித்துவத்தின் நபர்களுக்கிடையில் எப்போதும் இருக்கும் ஒரு உறவை நாம் தூரத்திலிருந்து காண்கிறோம். ஒருவர் தம்முடைய மகிமையை ஒருபோதும் நாடாமல் எப்போதும் மற்றவர்களுடைய மகிமையை நாடுகின்றனர்.
இயேசு தம்முடைய ஊழிய காலத்தில் தாழ்மையுள்ளவராக, “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்” என்று சொன்னார். ஆனால் தம்முடைய சீஷர்களை விட்டுப் பிரிந்துபோகும்போது, “வானத்திலும் பூமியிலும் எனக்குச் சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார். ஏனெனில் அவர் பிதாவுடன் சேர்ந்து அனைத்தையும் படைத்தவர். பிள்ளைகள் தகப்பனுக்கு உரியவர்களாகவும் தகப்பன் பிள்ளைகளுக்கு உரியவர்களாகவும் இருப்பதைப் போல, பிதா குமாரனுக்கு உரியவராயிருக்கிறார்.

. உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சியை கிறிஸ்து சீஷர்களுக்கு முன்னறிவிக்கிறார் (யோவான் 16:16-24)


யோவான் 16:16-19
16 நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார். 17 அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர்: நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள் என்றும், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றும் அவர் நம்முடனே சொல்லுகிறதின் கருத்தென்ன என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டதுமன்றி: 18 கொஞ்சக்காலம் என்கிறாரே, இதென்ன? அவர் சொல்லுகிறது இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே என்றார்கள். 19 அதைக்குறித்துத் தம்மிடத்தில் கேட்கும்படி அவர்கள் விரும்புகிறதை இயேசு அறிந்து, அவர்களை நோக்கி: கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்று நான் சொன்னதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே விசாரிக்கிறீர்களோ?
இந்த சாயங்காலத்திலேயே தம்முடைய பிரிவினையைக் குறித்து இயேசு மூன்று முறை தமது சீஷர்களிடம் பேசினார். இயேசு அவர்களிடம் இவ்விதமாக திரும்பத் திரும்பப் பேசுவது சீஷர்களுக்கு அதிர்ச்சியாயிருந்தது. அவர்கள் அவருடைய நோக்கத்தை அறியவில்லை. ஆனால் இயேசு தம்முடைய உயிர்த்தெழுதலைக் குறித்தும் தம்முடைய வருகையைக் குறித்தும் அவர்களிடம் பேசினார். அவர் உயிர்த்தெழுந்து தம்முடைய பிதாவைச் சந்தித்துவிட்டு, தமது உயிர்த்தெழுந்து சரீரத்துடன் சுவரை ஊடுருவி சீஷர்களைக் காண வந்தார்.
அவர்கள் ஒலிவ மலையில் ஏறிச் சென்றபோது அவருடைய சீஷர்களுக்கு தமது உயிர்த்தெழுதலைப் பற்றி அவர் முன்னறிவித்தவைகளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. முன்பு அவர் அவர்களைவிட்டுப் போகப்போகும் திட்டத்தைக் குறித்துப் பேசினார். இப்போது அவர் உண்மையில் நடைபெறப்போகும் பிரிவினையைப் பற்றிப் பேசுகிறார். இந்தத் திட்டங்களும் நோக்கங்களும் அவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது என்பதை அவர்கள் அறிக்கை செய்தார்கள். அவர்கள் வேதனையும் குழப்பமும் அடைந்தார்கள். அவர் பரலோகத்திற்குப் போகப்போகிறார் என்பதால் துக்கப்பட்டார்கள்.
யோவான் 16:20-23
20 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். 21 ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள். 22 அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான். 23 அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங்கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்.
இயேசு சீஷர்கள் பேசுவதைக் கேட்காவிட்டாலும், அவர்களுடைய சிந்தனைகளை அறிந்தார். அவர்களைத் தேற்றுவதற்குப் பதிலாக இன்னும் கண்ணீரும், வேதனையும், புலம்பலும் அவர்களுடைய வாழ்வை ஆட்டம்காணச் செய்யும் என்பதை அவர்களுக்கு வலியுறுத்திக் கூறினார். அது ஒரு நல்ல அரசனுடைய மரணத்தைப் போலக் காணப்பட்டது. அப்படிப்பட்ட தருணங்களில் மக்கள துக்கப்பட்டு நம்பிக்கை இழக்கிறார்கள். சீஷர்கள் துக்கப்பட்டபோது அவர்களுடைய எதிரிகள் மகிழ்வுற்றிருப்பார்கள். இங்கே எதிரிகள் என்று இயேசு குறிப்பிடும்போது உலகத்தைக் குறிக்கிறார், வெறுமனே யூதமதத் தலைவர்களைப் பற்றி மட்டும் குறிப்பிடவில்லை. கிறிஸ்துவுக்கு வெளியில் இருக்கும் அனைவரும் இழந்துபோன உலகத்தைச் சேர்ந்தவர்கள். அவர் இறைவனை விட்டுத் தூரமானவர்களும் பரிசுத்த ஆவிக்கு எதிராக கலகம் செய்பவர்களுமாயிருக்கிறார்கள்.
மேலும் சீஷர்கள் பெரிய மகிழ்ச்சியைக் கண்டுகொள்வார்கள் என்றும் சொன்னார். ஒரு தாயின் பேறுகால வலியைப்போல கண்ணீரும் புலம்பலும் சிறிதுகாலம் மட்டுமே இருக்கும். தாங்கள் பெற்றெடுக்கப்போகும் குழந்தையை நினைத்து தாய்மார் இந்த பிரசவ வலியை பெரிதாகக் கருதுவதில்லை.
இயேசு உயிரோடு எழுந்தபோது சீஷர்களுடைய அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது. அவர்களுடைய குற்றங்களைக் குறித்த காரியங்கள் தீர்க்கப்பட்டது; மரணம் மேற்கொள்ளப்பட்டது; சாத்தானுடைய ஆளுகை வீழ்த்தப்பட்டது; இறைவனுடைய கோபம் அவர்கள் மீதிருந்து அகற்றப்பட்டது. அவர்களுடைய மறுதலிப்புகளோ, பயங்களோ, அவிசுவாசங்களோ கிறிஸ்துவின் வருகையையோ அவர்களுடைய பாவமன்னிப்பையோ தடைசெய்ய முடியாது. கர்த்தர் அவர்களைக் காப்பதால் யூதர்களால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. அவர்களைக் கலங்கடித்துக்கொண்டிருந்த அனைத்துக் கேள்விகளுக்கும் பிரச்சனைகளுக்கும் பதில் கிடைத்தது. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவில் அவர்களுடைய அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்தது.
யோவான் 16:24
24 இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்ளுவீர்கள்.
இயேசு தம்முடைய பிரிவுபசாரப் பிரசங்கத்தின் ஆரம்பத்தில் சீஷர்கள் கேட்டுக்கொள்வது எதுவோ அது பிதாவினுடைய நாமத்தின் மகிமைக்காக அவர்களுக்கு அருளப்படும் என்று சொன்னார் (யோவான் 14:13). அநேகர் இந்தத் திரித்துவ இறைவனுடைய ஐக்கியத்திற்குள் வரவேண்டும் என்று இயேசு விரும்புவதால் இந்த விண்ணப்பங்கள் திருச்சபை கட்டப்படுவதையும் நற்செய்தி நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். ஆகவே அவர், “முதலாவது இறைவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும்” என்று கூறியிருந்தார். பரலோக காரியங்களுக்கும் இவ்வுலக காரியங்களுக்கும் இறைவன் பதில்தருவார் என்று இயேசு வாக்களித்தாலும், இவ்வுலகத்திற்குரிய காரியங்களிலும் பரலோக காரியங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
உங்கள் இருதயத்தின் கேள்விகளும் கோரிக்கைகளும் என்ன? உங்களுக்கு பணமா, சுகமா அல்லது வெற்றியா எது வேண்டும்? உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் ஒரு தொடர்பு வேண்டும் என்று நீங்கள் கேட்கிறீர்களா? இறைவன் ஒருவர் இருக்கிறாரா? அவர் இரக்கமுள்ளவரா? போன்ற கேள்விகள் உங்களைத் தாக்குகிறதா? உங்கள் குற்ற உணர்வின் பாரம் உங்களை அழுத்துகிறதா? சோதனைகள், அழிவுகள், துயரங்களினால் பாடுபடுகிறீர்களா? தீய ஆவிகளைக் கண்டு நீங்கள் நடுங்குகிறீர்களா? இயேசு வரவேண்டும் என்றும் அவர் தம்முடைய சமாதானத்தின் ஆட்சியை நிறுவ வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரத்தை வேதனைப்படுத்தும் கேள்வி எது? நீங்கள் மேலோட்டமானவரா அல்லது ஆழ்ந்து சிந்திப்பவரா? நீங்கள் நல்லதே நடக்கும் என்று நினைப்பவரா அல்லது எல்லாமே தீமையாகத்தான் நடக்கும் என்று நம்புபவரா? நீங்கள் சீக்கிரமாகக் காயப்பட்டு விடுகிறீர்களா? பரிசுத்த ஆவியானவர் உங்களை நிரப்ப வேண்டும் என்ற நீங்கள் கேட்கிறீர்களா?
உங்களுடைய ஒவ்வொரு பிரச்சனையையும் விண்ணப்பத்தில் இறைவனிடம் தெரியப்படுத்துங்கள். உங்கள் பரலோக பிதாவிடம் உங்கள் மனதைத் திறந்து பேசுங்கள். விண்ணப்பத்தில் வீண் வார்த்தைகளை அலப்பாமல், நீங்கள் கேட்க வேண்டிய காரியம் என்ன என்பதைக் கவனமாக சிந்தியுங்கள். முதலில் இயேசு உங்களுக்கு அருளிய வரங்களை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துங்கள். நன்றி செலுத்துவதே நமக்கு உகந்தது. உங்கள் பாவங்களை அறிக்கை செய்யுங்கள். ஏனெனில் விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகியவற்றில் நாம் குறைவுள்ளவர்கள். நீங்கள் அறிக்கை செய்த பாவங்களை அவர் உங்களுக்கு மன்னிக்க வேண்டும் என்றும் உங்களைக் குறித்த அவருடைய விருப்பம் என்ன என்பதை அவர் உங்களுக்குக் காண்பிக்க வேண்டும் என்றும் அவரிடம் கேளுங்கள். அப்போதுதான் உங்களுக்குத் தீமையான காரியங்களுக்காக நீங்கள் விண்ணப்பிக்க மாட்டீர்கள். அவருடைய கிருபையை நாடி அவர் உங்களுக்குச் செவிகொடுக்கிறார் என்பதை நம்புங்கள். இறைவன் அன்பாகவே இருக்கிறார் என்பதையும் அவர் மற்ற அனைவரையும் ஆசீர்வதிக்க விரும்புகிறார் என்பதையும் ஒருபோதும் சந்தேகிக்க வேண்டாம். உங்கள் நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் அதே கிருபையை அவர் வழங்கும்படியாக அவர்களுக்காக விண்ணப்பியுங்கள். நீங்கள் மட்டும்தான் தேவையுள்ளவர் என்று கருதாதீர்கள். அனைவருமே பாடுகளை அனுபவிக்கிறார்கள். உங்கள் கேள்விகளை தைரியமாகவும் நேரடியாகவும் கிறிஸ்துவிடம் கேளுங்கள். உங்கள் பிரச்சனைகளைச் சுற்றி நன்றிகளையும் பாவ அறிக்கைகளையும் கோர்த்து ஒரு மாலையை உருவாக்கி மற்றவர்களுக்கான விண்ணப்பத்துடன் சேர்த்து அவருக்கு அணிவியுங்கள். அப்போது இயேசுவின் நாமத்தில் ஏறெடுக்கப்படும் விண்ணப்பத்தின் உண்மையான வல்லமையை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
உண்மையான விண்ணப்பம் என்பது வேண்டுதல்களோடும் நன்றியறிதலோடும் ஆராதனையோடும் இறைவனோடு உரையாடுதலாகும். அப்படிப்பட்ட உரையாடல்களில் காரியங்களைத் திரும்பத்திரும்பக் கூறி அதை வளர்க்க வேண்டாம். உங்கள் பெற்றோரிடத்தில் எவ்வளவு சுருக்கமாக உங்கள் கோரிக்கைகளை முன்வைப்பீர்களோ அவ்வாறே சுருக்கமாகப் பேசுங்கள். “கர்த்தாவே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” என்று முணுமுணுத்த ஆயக்காரன் நீதிமானாக்கப்பட்டான் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். பரலோக பிதா லாசருவை எழுப்ப வேண்டும் என்று எளிமையாகக் கேட்ட மாத்திரத்திலேயே லாசரு உயிருடன் எழுப்பப்பட்டான். விசுவாசம்தான் இரட்சிப்பையும் ஆதரவையும் வெற்றியையும் பெற்றுத்தருகிறது. தைரியமாக நன்றியுணர்வுடன் அவருடைய கிருபைக்காக விண்ணப்பியுங்கள். நீங்கள் அவருடைய பிள்ளை என்று அழைக்கப்படுகிறீர்கள். ஒரு பிள்ளையைப் போல சந்தோஷத்துடன் எதையும் மறைக்காமல் அவரிடம் பேசுங்கள்.
உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதற்கு கிறிஸ்து ஆயத்தமாயிருக்கிறார். உங்கள் விண்ணப்பங்கள் அல்ல அதற்கான முதன்மையான காரணம். பிதாவும் குமாரனும் உங்களை ஆசீர்வதிக்கச் சித்தங்கொண்டுள்ளனர். உங்களுக்கு எது முக்கியம், அன்பளிப்பா, அன்பளிப்பைக் கொடுக்கிறவரா? கர்த்தர் உங்களுக்கு நிறைவைக் கொடுக்கிறார், ஆயினும் அவரே நிறைவாயிருக்கிறார் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். நம்முடைய சந்தோஷம் நிறைவாயிருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். நாம் குறைவுள்ளவர்கள் என்றும் இயேசு நம்முடைய விண்ணப்பங்களுக்குப் பதில் தருகிறார் என்றும் நாம் அறியும்போது நமது மகிழ்ச்சி முழுமையடைகிறது. அவர் மற்றவர்களையும் ஆசீர்வதித்து நம்முடைய விண்ணப்பங்களினால் அவர்களை மீட்கிறார். இயேசு மேகங்களில் வருவதைக் காணும்போது நம்முடைய மகிழ்ச்சி பேரானந்தமாக மாறும். அப்போது நம்முடைய சந்தோஷத்தை விவரிக்க முடியாது. கர்த்தராகிய இயேசு அனைவரும் காணும்படி வரவேண்டும் என்பது உங்கள் விண்ணப்பத்தின் முக்கிய வேண்டுதலாயிருக்கிறதா?

6. நம்மிலிருக்கிற சமாதானம் உலகத்திலுள்ள பாடுகளைத் தோற்கடிக்கிறது (யோவான் 16:25-33)


யோவான் 16:25-26
25 இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன். 26 அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக்கொள்ளுவீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்ளுவேனென்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை.
இயேசு பரலோக சத்தியங்களை உதாரணங்கள் மூலமாகவும் உவமைகள் மூலமாகவும் வெளிப்படுத்தினார். இவ்வுலகத்திற்குரியவர்களால் அதன் இரகசியங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் அவற்றைப் புரிந்துகொண்டார்கள். தம்முடைய சீஷர்கள் தம்மைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று இயேசு விரும்பினார். அதற்காக தாம் உயிர்த்தெழும் மாபெரும் நாளுக்காகவும் பரலோகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்து, பரிசுத்த ஆவியைப் பொழிந்தருளுவதற்காகவும் காத்துக்கொண்டிருந்தார். இந்த இரட்சிப்பின் நிகழ்வுகள் அனைத்தையும் அவர் ஒரே நாளாகத்தான் கருதினார். பரிசுத்த ஆவியானவர் சீஷர்களுடைய இருதயத்திற்குள் வரும்போது, இந்த உதாரணங்களுக்கும் உவமைகளுக்கும் தேவையிருக்காது. ஏனெனில் கிறிஸ்துவின் ஆவியே விசுவாசிகளுடைய இருதயத்திற்கு ஒளியேற்றுவார். இறைவன் பிதாவாக இருக்கிறார், கிறிஸ்து அவருடைய குமாரனாயிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் ஒருவனும் இறைவனைக் கண்டுகொள்ள முடியாது. குமாரனுடைய ஆவியானவர் நம்மை இறைவனுடைய குடும்பத்தில் இணைக்கிறார். இவ்வுலகத்தில் உங்களுக்கு ஒரு அப்பா இருக்கிறாரா? நீங்கள் அவரோடு பேசுகிறீர்களா? அவர் உங்களைப் பற்றி கரிசனை கொள்கிறாரா? இவையெல்லாம் ஆரம்ப கேள்விகள். இதற்கும் மேலான நிலையில், இயேசுவின் வார்த்தைகளும் பரிசுத்த ஆவியானவரின் ஆறுதல்களும் பரிசுத்தராகிய இறைவன் சர்வ வல்லமையுள்ளவர் என்பதை உறுதிசெய்கிறது. நமது தனிப்பட்ட நெருக்கமான இறைவன் அன்புள்ளவர் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. நாம் பாவிகளாயிருந்தாலும் அவருடைய பிரியமான பிள்ளைகளாயிருக்கிறோம். கிறிஸ்துவின் இரத்தத்தினாலே அவருக்கு முன்பாகப் பரிசுத்தமாகிறோம். பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் ஆவியாக இருப்பதால், அவர் மெய்யாக விண்ணப்பிக்கும்படி நம்முடைய வாய்களைத் திறக்கிறார். ஆவிக்குரிய விண்ணப்பத்தில் கிறிஸ்து நம்மூலமாகப் பேசுகிறார். ஆவியானவர் பிதாவிலுள்ள நம்பிக்கையிலும் குமாரனிலுள்ள ஐக்கியத்திலும் ஜெபிக்கிறபடி நீங்களும் ஜெபியுங்கள். உங்கள் விண்ணப்பம் உங்களில் வாசம்செய்யும் பரிசுத்த ஆவியானவருக்கும் குமாரனோடு ஒன்றாயிருக்கிற பிதாவோடும் நடைபெறும் உரையாடல் ஆகும்.
யோவான் 16:26-28
26 அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக்கொள்ளுவீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்ளுவேனென்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. 27 நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார். 28 நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார்.
தன்னுடைய பிள்ளைகளை நேசிக்காத தகப்பன் தகப்பனே அல்ல. இறைவனுடைய நாமத்தை நமக்கு வெளிப்படுத்தியதன் மூலமாக அவருடைய வல்லமையான அன்பை உணர்ந்துகொள்ள வகைசெய்தார். பிதாவினுடைய நாமத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதே கிறிஸ்துவினுடைய நோக்கத்தில் முக்கியமானது. பிதாவை அறிந்தவன் இறைவனை அறிந்திருக்கிறான். அவன் இறைவனுடைய பிள்ளையாக மாற்றப்பட்டு அவருடைய அன்பில் நிலைத்திருக்கிறான். அவருடைய நாமத்தில் முழு நற்செய்தியையும் நித்தியத்திற்கான நம்பிக்கையையும் காண்கிறோம். பிதாவே உங்களை நேசிப்பவராயிருப்பதாலும், அவர் அன்பும் இரக்கமும் நிறைந்தவராயிருப்பதாலும் இனிமேல் மத்தியஸ்தம் செய்வதற்கு யாரும் தேவையில்லை என்று கிறிஸ்து அறிவிக்கிறார். அவர் சிலுவையில் மரித்ததிலிருந்து பிதாவிற்கும் நமக்கும் இடையில் இப்போது எந்தத் தடையும் இல்லை. இறைவனுடைய ஆட்டுக்குட்டியாகிய குமாரனில் வைக்கும் விசுவாசத்தினால் கிறிஸ்துவை நேசிப்பவர்கள் மீது பிதா தம்முடைய அன்பை ஊற்றுவதற்கு வழியுண்டாகிறது. கிறிஸ்துவின் தெய்வீகத்துவத்தையும், அவர் பிதாவினிடத்திலிருந்து வருகிறார் என்பதையும், அவருடன் வாழ்கிறார் என்பதையும் அறிந்த ஒருவர், பரிசுத்த திரித்துவ இறைவனை அணுகியிருக்கிறார். அவன் இறைவனுடைய ஜீவனில் நிலைத்திருந்து, பிதாவின் கிருபையினால் நிறைந்து, பரிசுத்த ஆவியில் மகிழ்ந்திருக்கிறான்.
ஒரு வாக்கியத்தில் மீட்பின் அற்புதத்தை தமது சீடர்களுக்கு விளக்குகிறார். அவர் உன்னத தெய்வத்துவத்திலிருந்து கீழிறங்கி, எதிர்ப்பும் சீரழிவும் நிறைந்த உலகத்தில் வாழ்ந்து, சிலுவையில் மனுக்குலத்திற்கான நீதியைச் சம்பாதித்து, அதன்பிறகு இவ்வுலகத்தை விட்டு அனைத்து ஜீவனுக்கும் ஆதாரமான தம்முடைய பிதாவினிடத்திற்கு ஏறிச்சென்றார்.
யோவான் 16:29-30
29 அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: இதோ, இப்பொழுது நீர் உவமையாய்ப் பேசாமல், வெளிப்படையாய்ப் பேசுகிறீர். 30 நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை வினாவவேண்டுவதில்லையென்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீரென்று விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
சீஷர்கள் இறைவனுடைய அன்பின் மேன்மையையும் இயேசுவின் நித்திய தன்மையையும் அறிய ஆரம்பித்தார்கள். சர்வ ஞானமும், பரிசுத்தமும், நித்தியருமான உண்மையான இறைவன் இயேசுவே. கிறிஸ்து அன்பின் மனுவுருவாதல் என்பதை அறியவோ நினைவுகூரவோ தவறினார்கள். இயேசு இறைவனுடைய புதிய நாமத்தையும் அவருடைய முடிவற்ற அன்பையும் விளக்கமாக சீஷர்களுக்கு அறிவித்திருந்தபோதிலும், இயேசுவில் அவர்கள் இறைவனுடைய தன்மையைப் பார்க்கவுமில்லை, அவரைப் பிதா என்று அழைக்கவும் இல்லை. பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் சீஷர்களை இன்னும் ஒளிர்விக்கவில்லை. ஆகவே, அவர் இவற்றைக் கருத்தளவில் ஏற்றுக்கொண்டாலும் அவருடைய தன்மையின் சாரத்தைப் புரிந்துகொள்ளத் தயங்கினார்கள்.
யோவான் 16:31-32
31 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். 32 இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.
இயேசு புன்முறுவலுடன் அவர்களைப் பார்த்து, “என்னை உங்கள் அறிவினால் மட்டும் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா? அப்படிப்பட்ட அறிவும் மெய்யான விசுவாசமும் ஒன்றாகுமா? உங்களுக்குப் பரிசோதனை வருகிறது, நீங்கள் உங்கள் அன்பை நிரூபிப்பீர்களா? இறைவனுடைய தகப்பன் தன்மையை நீங்கள் நம்பாத காரணத்தினால் இறைவனை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்கள் எல்லாரும் என்னைக் கைவிட்டுவிட்டு ஓடிப்போவீர்கள். உங்கள் விசுவாசம் உறுதியற்றது என்பது காண்பிக்கப்படும்.”
“மரணத்தில் நான் தனிமையாக இருப்பதில்லை. என் பிதா என்னுடன் இருப்பார்.” இது அவர் சிலுவையில் “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று கதறியதோடு முரண்படுகிறதா? இல்லை. பரிசுத்தராகிய இறைவன் தம்முடைய குமாரனைவிட்டுத் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டாலும், தம்முடைய பிதாவின் பிரசன்னத்தைத் அவர் தொடர்ந்து நம்பினார். கிறிஸ்துவின் கதறல் இறைவன் மாறாதவர் என்பதையே காண்பிக்கிறது. “நான் உம்மைப் பார்க்காவிட்டாலும் உம்மை விட்டு விலகுவதில்லை. உம்முடைய கரங்களில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்” என்று இயேசு சொல்லுகிறார். இறைவனுடைய தகப்பன் தன்மையின் மீது கிறிஸ்து வைத்திருந்த விசுவாசத்தினாலேயே அவர் நமக்காக ஏற்றுக்கொண்ட நியாயத்தீர்ப்பை மேற்கொள்ள முடிந்தது. நம்முடைய பாவத்தினால் உண்டான இறைகோபத்தின் நெருப்பை பிதாவின் மீதான குமாரனுடைய அன்பு அணைத்துப்போட்டது. அவருடைய மாறாத நம்பிக்கை நாம் பிதாவைப் பார்க்கும் வாசலை நமக்குத் திறந்தது. பிதாவினுடைய சித்தத்தின்படி குமாரன் மரணத்தைச் சந்தித்தபடியால், “நான் தனிமையில் இல்லை, என் பிதா என்னோடு இருக்கின்றார்” என்று சொன்னார்.
யோவான் 16:33
33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
அனைத்து விசுவாசிகளுக்கும் ஆறுதல் தரும் வகையில் இயேசு தமது பிரியாவிடை உரையை முடிக்கிறார். “நான் சில காலம் உங்களுடன் இருந்து, உங்கள் இருதயத்தைச் சமாதானத்தினால் நிரப்பும்படி உங்களுக்குப் போதித்தேன். அவிசுவாசிகளுக்குச் சமாதானம் இல்லை. குமாரனாகிய நான் உங்கள் பாவங்களை மன்னித்து, உங்கள் இருதயங்களைச் சுத்திகரித்தேன். என் சமாதானத்தின் ஆவியை உங்களுக்குக் கொடுக்கிறேன். என் வார்த்தைகளில் நிலைத்திருங்கள். நான் உங்களைப் பாதுகாக்கிறேன். என்னையன்றி உங்களுக்குப் பாதுகாப்பில்லை. நீங்கள் இறைவனோடு ஒப்புரவாகுவதே உங்கள் சமாதானத்தின் ஆதாரம். என்னுடைய இரத்தத்தினால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படாவிட்டால் உங்களுக்கு சுத்த மனசாட்சி இருக்காது. நான் உங்களை இரட்சித்திருக்கிறேன், என்னுடைய ஆவி உங்களில் இருக்கிறார். என்னுடைய சமாதானம் மாயையானதல்ல, மெய்யானது. நான் உங்களுக்குச் சமாதானத்தைத் தருவதற்காகவே நான் வந்திருக்கிறேன். அதை ஏற்றுக்கொண்டு, என்னை விசுவாசியுங்கள்.”
“இந்த உலகத்தில் உங்களுக்குச் சமாதானம் இருக்கிறது என்று கருதாதீர்கள். இல்லை. இவ்வுலகில் உங்களுக்கு ஆபத்துகள்தான் இருக்கிறது. உபத்திரவமும், சுகவீனங்களும், ஏமாற்றங்களும், மரணமும், பயமுமே உங்களுக்குக் காத்திருக்கிறது. சட்டவாதிகள் உங்களைப் புறக்கணிப்பார்கள். எதையும் ஆழமாகச் சிந்திக்காதவர்கள் உங்களைப் பரிகசிப்பார்கள். ஆயிரக்கணக்கான பொய்களும் தத்துவங்களும் உங்கள் விசுவாசத்தைப் பரிசோதிக்கும். பெருமை எப்போதும் உங்களை நெருங்கி வரும். பணத்தை ஒருபோதும் நேசிக்காதீர்கள். அது உங்களைப் பாதுகாக்காது.”
“உலகத்தைவிட்டு உங்கள் கண்களைத் திருப்பி என்னை நோக்கிப் பாருங்கள். எனது வாழ்வைத் தியானியுங்கள், எனது வார்த்தைகளைப் புரிந்துகொள்ளுங்கள். என் அன்பை அறிந்து எனது தாழ்மையைப் பின்பற்றுங்கள். எனது சுய தியாகத்திலும் சுயவெறுப்பிலும் நிலைத்திருங்கள். நான் இந்த உலகத்தை வென்றேன். நான் எனக்காக எதையும் கேட்கவில்லை. நான் இறைவனுடைய பரிசுத்தராயிருக்கிறேன். “நான் பரிசுத்தராயிருக்கிறதுபோல நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” என்ற கட்டளை என்னில்தான் நிறைவேறுகிறது. நானே அன்பின் முழுமையாயிருக்கிறேன், என்னில் பிதாவைக் காண்பீர்கள்.”
இயேசுவின் பிரியாவிடை பிரசங்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறீர்களா? உங்கள் மனதில் கிறிஸ்துவின் சமாதானத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளும்படி, அவர் பிதாவின் ஐக்கியத்தில் உங்களை இணைத்திருக்கிறார். இந்த சமாதானம் ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. இவ்வுலகம் தீமையுள்ளதாக இருந்து, உங்களுக்குப் பிரச்சனைகளைக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கும். ஆனால் சாத்தானையும் மரணத்தையும் வெற்றிகொண்டவர் மீது நீங்கள் விசுவாசம் வைத்தால், இறைவனுடைய கோபத்திலிருந்தும் புறம்பான உபத்திரவத்திலிருந்தும் நீங்கள் காக்கப்படுவீர்கள். இயேசுவின் இந்தச் செய்தி உங்களை நிரப்பியிருக்கிறதா? “பிதா என்னுடையவர், குமாரன் எனது இரட்சகர், ஆவியானவர் என்னில் வாழ்கிறார். ஒரே இறைவன் என்னில் வாழ்கிறார். அவருடைய கிருபையில் நான் நிலைத்திருக்கிறேன்” என்று சொல்லும்படி பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாழ்கிறாரா?

By
Wateroflife. org

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.