பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள்
மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி
நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச்
சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும்
உண்டாக்கினார்.
(எபிரெயர் 1:1-2)
டைட்டானிக் கப்பலின் பாதையில் பனிப்பாறைகள் உள்ளதை வெகு குறுகிய
தூரத்தில் கண்டறிந்த மாலுமிகள், இனித் தப்பிக்க வழியில்லாததை உணர்ந்து,
அருகாமையில் பயணித்த கப்பல்களுக்கு, டைட்டானிக் கப்பலின் ஆபத்துகால
சமிக்ஞைகளை அனுப்பினார்கள்! அந்த சமிக்ஞைகளை தாமதமாகப் பெற்று, ஆபத்தை
உணர்ந்த மற்ற கப்பல்கள், டைட்டானிக்கைக் காப்பாற்ற விரைந்தன. ஆனால் அவை
டைட்டானிக்கை "நெருங்குவதற்குள்" இரவு 11.40க்கு கப்பலில் பக்கவாட்டை
பனிப்பாறைகள் கிழித்ததும் கடல்நீர் சீறிக்கொண்டு உள்ளே புகுந்தது.
அதிகாலை 2.20க்கு டைட்டானிக் முற்றிலும் மூழ்கிப்போய் இருந்தது. கப்பலில்
இருந்து 2223 பேரில் 706பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். பலருக்கும்
நீச்சல் தெரிந்தாலும் கடலின் மைனஸ் 2 டிகிரி பனிக்குளிர் அவர்களின்
மூச்சை மொத்தமாய் நிறுத்தி இருந்தது. உதவிசெய்யவந்த கப்பல்கள் ஒன்றும்
செய்ய இயலாமல்போனது!
இந்த பூமி பாவத்தில் மூழ்க ஆரம்பிக்கையில், எல்லா சிருஷ்டிகளும் ஏகமாய்
தவித்து பிரசவ வேதனைப் படுகையில், ஏற்றவேளையில் தம்குமாரன் இயேசுவை
அனுப்பிவைத்தார் பிதாவாகிய தேவன்! அவரால் உலகம் இரட்சிப்படைய! மீட்படைய!
அவரே வாழ்வு என்று வேதம் தெளிவு படுத்தினாலும் கூட, அனேக கூட்டங்களில்,
குரல்களில், பாடல்களில் கேட்டாலும்கூட பலர் அசட்டை செய்து உலாவி
வருவதாலும், செவித்தினவுள்ளவர்களாக இருப்பதாலும்,
"மனந்திரும்புங்கள்! பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது" என்ற
இரட்சிப்பின் தொனி அசட்டை செய்யப்படுகிறது! பாவக்கடலில் மூழ்கிடாமல்,
இயேசுவின் கரங்களைப்பற்றி இரட்சிக்கப் படுவோம். ஆமென்!