அப்போஸ்தலர் 1:6-8
6 அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா
இராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.
7 அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற
காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.
8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து,
எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின்
கடைசிப்பரியந்தமும், எனக்குச்
சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
சீடர்கள் இந்த
இவ்வுலகத்திற்குரிய, அரசியல் ரீதியான கேள்வியைக் கேட்க இயேசுவிடம்
வந்தபோது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லை. அவர்கள் இன்னும்
யூதர்களாக தங்கள் தேசப்பற்றைப் பற்றியும் எருசலேமில் தங்களுக்கு என்ன
பங்கு கிடைக்கும் என்றும் சிந்தித்துக்கொண்டி
ருந்தார்கள். மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்திருக்கும் அரசனாகிய
கிறிஸ்து, எருசலேமிலிருந்து மகிமையோடும் மகத்துவத்தோடும் அனைத்து
மக்களையும் ஆளுகை செய்வார் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.
இயேசு இந்தக் கேள்வியைப் புறக்கணித்துவிடவில்லை என்பது ஆச்சரியமான
ஒன்றாயிருக்கிறது. ஆனால் தெய்வீக அரசாட்சி நிச்சயமாக வரும் என்பதை அவர்
உறுதிசெய்தார். ஆனாலும் பரலோக அரசு மனிதர்களுடைய கற்பனைகளின்படி
நிறுவப்படாது என்றும், உடனடியாக அந்த நிகழ்வு நடந்துவிடாது என்றும் அவர்
தம்முடைய சீடர்களுக்கு உறுதிசெய்கிறார்.
இறைவனிடம் சிறப்பான திட்டம் ஒன்றிருந்தது. உலகத்தின் முழு வரலாற்றையும்
அவர் உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே தம்முன் கொண்டவராக, ஒவ்வொரு
கோத்திரமும் இனமும் மனந்திரும்புவதற்கும் உயிருள்ள விசுவாசத்தைப்
பெற்றுக்கொள்வதற்கும் அவர் போதிய அளவு காலம் கொடுத்திருந்தார். மேலும்
அவர் தம்முடைய பொறுமைக்கு காலத்தையும் எல்லையையும் குறித்திருந்தார்.
இந்த வரலாற்றின் திட்டவட்டமான போக்கு அழிவிற்குரிய தலைவிதியைப் போலவோ
அல்லது பயங்கரமான தெய்வீக ஆணையாகவோ நமக்கு முன்பாக நிற்பதில்லை. மாறாக
நம்முடைய தகப்பன் காலத்தின் போக்கை இவ்விதமாக
நிர்ணயித்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம்.
அவருடைய அன்பு எப்போதும் இவ்வுலகத்திற்கு நன்மையைத்தான் கொண்டு
வந்திருக்கிறது என்றும் கொண்டு வருகிறது என்றும் நாம் அறிவோம். அவருடைய
அன்பு காலங்களையும் தன்வசம் வைத்திருப்பதால் நாம் பயப்பட வேண்டிய தேவையே
இல்லை எனலாம்.
நம்முடைய தகப்பன் ஆட்சியாளராகவும் உண்மையான
அதிகாரியாகவும் இருக்கிறார். எந்தவித புரட்சியின் நடவடிக்கைகளோ,
ஆயுதங்களின் குவியல்களோ அவருடைய திட்டத்தை நிறைவேற்றுவதில் எந்த
மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. ஏனெனில் அவருடைய அரசு ஆவிக்குரிய
நிலையில் மட்டுமல்ல, மகிமையோடும், வல்லமையோடும் தவறேதுமின்றி நிச்சயமாக
வரும். இறைவனுடைய அதிகாரம் அன்பிலும் சத்தியத்திலும்
கட்டப்பட்டிருக்கிறது, அநியாயத்திலும் அக்கறையின்மையிலும்
கட்டப்படவில்லை. யார் இறைவனைத் தகப்பனாகக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள்
எதிர்காலத்தைக் குறித்து மகிழ்ச்சியுடையவர்களாயிருப்பார்கள்.
கிறிஸ்து தம்முடைய சீடர்களுடைய மனதில் இருந்த அனைத்து அரசியல்
சிந்தனைகளையும் துடைத்தெறிந்துவிட்டு, காணக்கூடியதாக இருக்கும் பிதாவின்
வாக்குறுதிக்காக அவர்கள் காத்திருக்க வேண்டும் என்று அவர்களை
ஆயத்தப்படுகிறார். அந்த வாக்குத்தத்தம் நிறைவேறும் போது அவர்கள்
"வல்லமையைப் பெற்றுக்கொள்வார்கள்" என்று கிறிஸ்து குறிப்பிடுகிறார்.
அன்பார்ந்த வாசகரே, நீங்கள் பலவீனமானவர் என்றும், மற்ற மனிதர்களைப் போலவே
நீங்களும் இறந்து போவீர்கள் என்றும் அறிந்திருக்கிறீர்களா? இறைவனுடைய
பரிசுத்தத்தோடும், மகிமையோடும், ஞானத்தோடும் ஒப்பிடும்போது நீங்கள்
முட்டாள் என்றும் அசிங்கமானவர் என்றும் தீமையுள்ளவர் என்றும்
அழிந்துபோகக் கூடியவர் என்றும் உங்களுக்குத் தெரியுமா? அவருடைய வல்லமை
இயற்கையான சுபாவமுள்ள
மனிதர்களிடத்தில் இறங்குவதில்லை. உங்கள் சொந்த பலத்தினால் உங்களை நீங்களே
சீரமைத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் எல்லா மனிதர்களைப் போல நீங்களும்
பெலவீனர்களாகவும் பாவத்திற்கு அடிமைகளாகவும் இருக்கிறீர்கள்.
கிறிஸ்து தம்முடைய மறைவான அரசை நிறுவும்போது முதலாவதாக தம்முடைய
சீடர்களுக்கு அவர் வல்லமையைக் கொடுக்கிறார். வல்லமை என்று கிரேக்க
வார்த்தைக்கு "வெடிகுண்டு" என்று பொருள். இறைவனுடைய வல்லமை நம்முடைய
கல்லான இருதயத்தை உடைத்து நொறுக்கி, இரக்கமுள்ள இருதயத்தை நமக்குக்
கொடுத்து, நாம் இறைவனுக்குரிய காரியங்களைச் சிந்திக்கத்தக்கதாக நம்முடைய
மனக்கடினத்தை மேற்கொள்கிறது.
கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு இறைவன் கொடுக்கும் தெய்வீக ஈவு அவர்
உலகங்களைப் படைத்தபோது பயன்படுத்திய அதே தெய்வீக வல்லமையே ஆகும். இந்த
இறைவனுடைய வல்லமையை இயேசுவில் நாம் வெளிப்படையாகக்
காணக்கூடியதாயிருந்தது.
