இதற்கு முன்பாக, வானத்தையும் பூமியையும் அசைக்கப்போகின்ற ஒரு பெரிய
மாற்றம் வரும் என்று திருமுழுக்கு யோவான் அறிந்திருந்தார். தீமையும் சுய
நலமும் நிறைந்த மக்களுடைய கல்லான இருதயங்களும் புறக்கணிக்கிற மனங்களும்
ஆயத்தப்படுத்தப்படாமல் இறைவனுடைய அரசு வராது என்பதை, வனாந்தரத்தில்
வாழ்ந்த இயேசுவின் முன்னோடியாகிய இவர் அறிந்திருந்தார்.
அவர்கள் மரணத்திற்கு உரியவர்கள் என்பதைக் காண்பிக்கும்படி
மனந்திரும்பியவர்களுக்கு அவர் யோர்த்தான் நதிக்கரையில் திருமுழுக்குக்
கொடுத்தார். அவர்கள் திருமுழுக்குப் பெற்று தண்ணீரிலிருந்து எழுந்து
வருவது அவர்களில் இறைவன் தரவிருக்கும் புதிய படைப்பாகிய புதிய தன்மையை
அடையாளப்படுத்தியது.
யோவான் தன்னுடைய திருமுழுக்கு அந்த மக்களை உண்மையில் மாற்றமடையச்
செய்யாது என்று அறிக்கையிட்டு அவர்களுக்கு போதனை செய்தார். மக்கள்
முழுவதும் தண்ணீரில் மூழ்குவது எந்த மனிதனும் தன்னையோ மற்றவர்களையோ மாற்ற
முடியாது என்பதையே காண்பிக்கிறது. நாம் அனைவரும் தீயவர்களாகவும்,
கீழ்த்தரமானவர்களாகவும், மாம்சத்திற்குரியவர்களாகவும் இருப்பதால்
ஒருவரும் எந்த சடங்கினாலும் தன்னைச் சுத்திகரித்துக்கொள்ள முடியாது.
வனாந்தரத்தில் வந்த தீர்க்கதரிசியாகிய திருமுழுக்கு யோவான்
மனந்திரும்புகிறவர்களுக்கு பரிசுத்த ஆவியினால் திருமுழுக்குக்
கொடுக்கவிருக்கும் இறைவனுடைய ஆட்டுக்குட்டியை மக்களுக்குச்
சுட்டிக்காட்டினார். அவர் பரிசுத்த ஆவியினால் பிறந்து, தொடர்ந்து
பாவமில்லாதவராக வாழ்ந்தார்.
அவர் ஆவியில் பழுதற்ற பலியாகத் தம்மை இறைவனுக்கு
ஒப்புக்கொடுத்து, நாமும் இந்த ஆசீர்வாதமான ஆவியைப்
பெற்றுக்கொள்ளும்படி, உண்மையுள்ளவர்கள் அனைவரையும் தம்முடைய பிதாவோடு
ஒப்புரவாக்கினார்.
நீங்கள் பிதாவின் வாக்குறுதியை உணர்ந்துகொண்டிருக்கிறீர்களா? ஆவியானவர்
உங்களில் வாழும்படி
தீர்மானித்திருக்கிறார். அது நடைபெறும்போது கிறிஸ்து உங்கள் இருதயத்தில்
இருப்பார், உங்கள் உடல், உயிருள்ள இறைவனுடைய ஆலயமாக மாறும்.
நீங்கள் இன்று இறைவனை பெற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்கிறீர்களா?
கிறிஸ்து எப்போதுமே தாழ்மையுள்ளவராயிருந்தது போல நீங்களும் உங்களைத்
தாழ்த்தி இறைவனுடைய வாக்குறுதிக்காக ஆயத்தப்படுங்கள்.
திருமுழுக்கு யோவான் சொன்னதைப் போல "நான் உங்களுக்குப் பரிசுத்த
ஆவியினால் திருமுழுக்குக் கொடுப்பேன்" என்று இயேசு சொல்லவில்லை.
மாறாக அந்த மகிமையை அவர் தம்முடைய பிதாவிற்குக் கொடுத்துவிட்டார்.
பரிசுத்த ஆவியானவரே அவர்களிடம் வருவதற்குத்
தீர்மானித்திருக்கிறார் என்று அவர்களுக்குப் போதித்தார்.
பிதாவும் குமாரனும் பரிசுத்த ஆவியானவரை வழங்குவதில் முழுவதும்
ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள். ஏனெனில்
பிதாவினிடத்திலிருந்தும் குமாரனிடத்திலிருந்தும் புறப்பட்டு வரும் இந்த
ஆவியானவர் அன்பின் ஆவியானவராயிருக்கிறார்.
அன்புள்ள சகோதரனே, நீங்கள் இறைவனுடைய அன்பை உணர்ந்திருக்கிறீர்களா?
தம்முடைய சீடர்கள் காத்திருந்து, விண்ணப்பிக்க வேண்டும் என்று கிறிஸ்து
கட்டளையிட்டிருப்பதற்கு இணங்க நீங்களும் அவரைப் பெற்றுக்கொள்ள
விண்ணப்பதுடன் ஆயத்தப்படுகிறீர்களா?
