லேவியராகமம் அறிமுகம்

லேவியராகமம் அறிமுகம்

 

லேவியராகமம் புஸ்தகத்தின் ஆசிரியர் மோசே. கி.மு. 1686 ஆம் வருஷத்தில் இந்தப் புஸ்தகம் எழுதப்பட்டது. சீனாய்மலையில் கர்த்தர் மோசேக்குக் கொடுத்த பிரமாணத்தின் ஒரு பகுதியாக இந்தப் புஸ்தகம் எழுதப்பட்டிருக்கிறது

 

இரட்சிக்கப்பட்ட தேவனுடைய ஜனங்களின் ஆராதனை, ஊழியம், அன்றாட வாழ்க்கை முறை ஆகியவற்றை லேவியராகமம் புஸ்தகம் விளக்குகிறது

 

யாத்திராகமம் புஸ்தகத்தில் எகிப்து தேசத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் வெளியேறி வனாந்தரத்தில் பிரயாணம் செய்த நிகழ்ச்சிகள் விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆசாரியத்துவ ஊழியத்திற்கு ஆரோனும், அவருடைய குமாரரும் அழைக்கப்படுதல், தேவனுடைய வாசஸ்தலம் ஸ்தாபிக்கப்படுதல் ஆகிய நிகழ்ச்சிகளெல்லாம் யாத்திராகமம் புஸ்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன

 

பலிகளையும், காணிக்கைகளையும் செலுத்துவது சம்பந்தமான பிரமாணங்கள் லேவியராகமத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆசாரியருடைய பிரதிஷ்டை, ஆசரிப்புக் கூடார ஆராதனையின் ஸ்தாபனம், தேவனுடைய பிள்ளைகளின் ஆவி ஆத்துமா, சரீரம், ஆகியவற்றின் பரிசுத்தம், இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தரோடுள்ள ஐக்கியம் கர்த்தருடைய பண்டிகைகள், ஆசரிப்புக்கூடாரத்தில் கர்த்தர் தமது ஜனங்கள் மத்தியில் வாசம்பண்ணுவது, தேவனை அணுக வேண்டிய முறைகள், தேவனோடு ஐக்கியமாக இருப்பதற்கான வழிகள் ஆகியவையெல்லாம் லேவியராகமத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது

 

லேவியராகமம் புஸ்தகத்தில் சரித்திர சம்பந்தமான செய்திகள் எதுவும் சொல்லப்படவில்லை ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆசாரிய ஊழியத்திற்காக பிரதிஷ்டைபண்ணப்படுகிறார்கள் (லேவி 8,9 ஆகிய அதிகாரங்கள்)

 

நாதாபும் அபுயூவும் கர்த்தருடைய சந்நிதியில் அந்நிய அக்கினியை கொண்டு வந்தார்கள். அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு அவர்களை பட்சித்துப்போடுகிறது. அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்துப்போகிறார்கள் (லேவி 10#ஆவது அதிகாரம்). செலோமித்தின் குமாரன் இஸ்ரவேலரோடேகூட சண்டைபண்ணிக் கொண்டிருக்கிறான். அவன் கல்லெறிந்து கொல்லப்படுகிறான் (லேவி 24#ஆவது அதிகாரம்)

 

லேவியராகமம் புஸ்தகத்தில் ஆராதனைக்கு அடுத்த பிரமாணங்கள் விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கிறது கர்த்தர் மோசேயின் மூலமாக இஸ்ரவேல் புத்திரருக்கு தம்முடைய பிரமாணத்தைக் கொடுத்திருக்கிறார் அவர்கள் செலுத்த வேண்டிய பலிகள், காணிக்கைகள், அவர்களுடைய போஜனங்கள், அவர்கள் பருகவேண்டிய பானங்கள், அவர்களுடைய சுத்திகரிப்பு ஆகியவற்றைப்பற்றியெல்லாம் கர்த்தர் இஸ்ரவேல் ஜனத்தாருக்கு சொல்லியிருக்கிறார்

 

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விசேஷமானவர்கள் கர்த்தர் அவர்களை மற்ற ஜாதியாரிடமிருந்து வேறுபிரித்து, தமக்கு சொந்த ஜனமாக தெரிந்துகொள்கிறார். லேவியராகமம் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற பிரமாணங்களெல்லாம், இனிமேல் வரப்போகிற நன்மையான காரியங்களுக்கு அடையாளமாயிருக்கிறது. இவை இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தில் நிறைவேறுகிறது

 

லேவியருடைய ஆசாரிய ஊழியத்தைப்பற்றி இந்தப் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதினால், இது லேவியராகமம் என்று அழைக்கப்படுகிறது

 

"அல்லாமலும், இஸ்ரவேல் ஜனங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள் அந்த ஆசாரிய முறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல் மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன?" (எபி 7:11).

 

கர்த்தர் தங்களுக்கு சொல்லியிருக்கிற பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து, லேவியர்கள் கர்த்தருக்கு ஊழியம் செய்யவேண்டும். இவர்கள் கர்த்தருடைய பிரமாணங்களை இஸ்ரவேலின் மற்ற கோத்திரத்தாருக்கும் உபதேசம்பண்ணவேண்டும்.

 

யாத்திராகமம் புஸ்தகத்தின் முடிவில், கர்த்தருடைய ஆசரிப்புக்கூடாரம் ஸ்தாபனம்பண்ணப்படுவது பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆசாரியர்கள் கர்த்தருடைய வாசஸ்தலத்திலே அவருக்கு ஆராதனை செய்கிறார்கள். கர்த்தர் மோசேயின் மூலமாக லேவியருக்கு சொல்லியிருக்கிற பிரகாரம், அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்யவேண்டும்.

 

கர்த்தருக்கு பலி செலுத்துவது சம்பந்தமான பிரமாணங்கள் இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பூர்வகாலம் முதலே மனுபுத்திரர் மத்தியில் கர்த்தருக்கு பலி செலுத்தும் வழக்கம் இருந்து வருகிறது. கர்த்தர் மோசேக்கு பலி செலுத்துவது சம்பந்தமான பிரமாணத்தை சொல்லுகிறார்

 

காளை (லேவி 1:3-9). செம்மறியாடு அல்லது வெள்ளாடு (லேவி 1:10-13). காட்டுப்புறா அல்லது புறாக்குஞ்சு (லேவி 1:14-17). நாம் கர்த்தருக்கு எவ்வளவு பெரிய பலியை செலுத்துகிறோம் என்பது முக்கியமல்ல. கர்த்தருக்கு பலிசெலுத்துகிறவர்கள் சுத்த இருதயத்தோடு பலிசெலுத்தவேண்டும். நாம் கர்த்தருடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து பலி செலுத்தவேண்டும். கர்த்தர் நம்முடைய பலிகளை அங்கீகரிக்கும் வண்ணமாக நாம் அவருக்கு பலி செலுத்தவேண்டும்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.