கேட்கப்பட்டதும்! கொடுக்கப்பட்டதும்!(சிலுவை தியானம்) 1 கொரிந்தியர் 1:17-18
முன்னுரை: கிறிஸ்தவ வாழ்வில் சில வேளைகளில் நாம் கேட்டதை ஆண்டவர் கொடுப்பார் ஆனால், சில நேரங்களில் அவர் கொடுப்பதை நாம் எவ்வித மறுப்புமின்றி பெற்றுக்கொள்ளவேண்டும். நாம் கேட்டதை ஆண்டவர் கொடுக்கும்போது நமது விசுவாசம் ஈடேறும். அதேவேளையில், ஆண்டவர் கொடுப்பதை பெற்றுக்கொள்ள மறுப்போமேனில் அது நமது இரட்சிப்பிற்கு இடையூறாக அமைந்து விடும் என்பதைதான் நாம் இந்த வசனங்களில் பார்க்கவிருக்கின்றோம்.
கேட்கப்பட்டதும்! கொடுக்கப்பட்டதும்!:
யூதர்களையும் அவர்களின் வாழ்வில் தேவனின் அற்புதத்தையும் தனித்தனியாக பிரிக்க முடியாது. மோசே, எலியா மற்றும் எலிசா ஆகியோரின் கரத்தினால் தேவன் செய்த அற்புதங்கள் இதற்க்கு சான்றாகும். என்றபோதிலும், புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவின் காலத்திலும், அப்போஸ்தலர்களின் காலத்திலும் இயேசுவே மேசியா என நம்புவதற்கு யூதர்கள் கேட்ட அடையாளம் வெறும் அற்புதமட்டுமல்ல அவரது தலைமையின்கீழ் யூதர்களின் உலகளாவிய ஆட்சியுமாகும். சீஷர்களுக்கும் இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு இருந்ததை நாம் அப்போஸ்தலர்கள் 1:6 இன் மூலம் அறியலாம். இன்றைக்கும் யூதர்கள் மேசியாவின் உலகளாவிய ஆட்சியே அவரின் அடையாளம் என்று கூறி வருவது நாம் அறிந்ததே. ஆனால் கிறிஸ்துவின் சிலுவை மரணம் மற்றும் அவரின் உயிர்த்தெழுதலே அன்றும், இன்றும், மற்றும் என்றைக்குமாக தேவன் இயேசுகிறிஸ்துவின் மூலமாகவும், அப்போஸ்தலர்களின் மூலமாகவும் யூதர்களுக்கு கொடுத்த ஒரே அடையாளமாகும் (யோவான் 2:18-21 மத்தேயு 12:38-41). காரணம், மேசியாவின் ஆட்சி அல்ல சிலுவையில் அவர் பட்ட தழும்புகளே நம்மை குணமாக்கும், நமது பாவங்களை சுத்திகரிக்கும் (ஏசாயா 53:5).
இந்த வசனங்கள் நமக்கு கற்று தரும் ஆவிக்குரிய பாடங்களாவன;
முதலாவது, அன்றைக்குமட்டுமல்ல இன்றைக்கும் அற்புதம் செய்யும் இயேசு அல்ல சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசுவே அநேகருக்கு இடறலாக இருக்கிறார்.
இரண்டாவது,
விசுவாத்தைக் கொண்டு கிருபையினால் மட்டுமே கிடைக்கும் இரட்சிபை அற்புதத்தினால் பெற நினைப்பது ஆவிக்குரிய மடமை.
மூன்றாவது,
தேவன் நம்மை எவ்வளவாக நேசிக்கிறார் என்பதற்கு தேவன் கொடுத்த ஒரே அடையாளம் கிறிஸ்துவின் சிலுவை.
நான்காவது,
தேவன் நமக்கு கொடுக்கும் இரட்சிப்பை பெற்றுக்கொள்வோமெனில் இரட்சிக்கபடுவோம். நாம் விரும்பும் அடையாளத்தை அவர் தரவேண்டுமென்று நினைத்தால் இடறல் அடைவோம்.
முடிவுரை: அடையாளத்தை தேடுகிறவர்களுக்கு சிலுவையைப்பற்றிய உபதேசம் இடறல். இயேசுகிறிஸ்துவின் பாடுகளையும், சிலுவை மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் விசுவாசிப்போருக்கு அது இரட்சிப்பிற்கேதுவான தேவப்பெலன்.
இப்படிக்கு
கிறிஸ்துவின் பணியில்
G. பால் ராஜ்