*"யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன்
சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த
எல்லாவற்றைப்பார்க்கிலும், இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத்
தந்தருளினார்"* (யோபு 42:10).
யோபுவைப் போல, பாடுகளின் பாதையிலே நடந்த, வேறொரு நபரைக் காணவே முடியாது.
சாத்தான், யோபுக்கு விரோதமாய் சதி செய்து, யோபுவை பயங்கரவிதமாய்
சோதித்தான். அவனுடைய வீடு இடிந்து விழுந்து, அதிலே இருந்த அவனுடைய பத்து
பிள்ளைகளும், முகம் சிதைந்து, அலங்கோலமாய் மரித்தார்கள். ஆறுதலுக்காக ஒரு
பிள்ளையைகூட, சாத்தான் விட்டு வைக்கவில்லை.
இதைக் கவனித்த யோபுவின் மனைவி, "நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில்
உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து, ஜீவனை விடும்" என்று சொன்னாள்.
ஆனால் யோபு பக்தன், சோர்ந்து, தளர்ந்து போய்விடவில்லை. கர்த்தர்மேலுள்ள
பக்தியை கைவிடவில்லை. கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தாலும், அதைத்
தாங்கிக்கொண்டு, *"கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய
நாமத்துக்கு ஸ்தோத்திரம்" என்றான். இவை எல்லாவற்றிலும் யோபு பாவம்
செய்யவுமில்லை. தேவனைப் பற்றிக் குறை சொல்லவுமில்லை"*
(யோபு 1:21,22).
அடுத்ததாக, சாத்தான் யோபின் உள்ளங்கால் தொடங்கி, அவன் உச்சந்தலை மட்டும்,
கொடிய பருக்களால் (புண்களால்) அவரை வாதித்தான். அவர் ஒரு ஓட்டை எடுத்து,
தன்னை சுரண்டிக் கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தார். ஆனாலும் கர்த்தர்
மேலுள்ள நம்பிக்கையை யோபு விட்டுவிடவில்லை. *"அவர் என்னைக் கொன்று
போட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்"* (யோபு 13:15). *"நான்
போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்த பின், நான் பொன்னாக
விளங்குவேன்"* (யோபு 23:10) என்று சொன்னார்.
சரீரப் பாடுகளைப் பார்க்கிலும், அதிக வேதனையைத் தருவது, உள்ளத்தின்
சோர்வுகள். ஒரு குடும்ப பெண் சொன்னாள், "ஐயா, என்னுடைய கணவன்
ஏழையாயிருந்தபோதிலும், நான் அவரை நேசித்து, கரம்பிடித்தேன்.
தரித்திரத்தின் பாதையிலே, நாங்கள் நடந்தபோதுகூட, சோர்ந்துபோகாமல்,
மனமகிழ்ச்சியோடு அதை ஏற்றுக்கொண்டேன். ஆனால் என் கணவன் என்னை
விட்டுவிட்டு, வேறொரு பெண்ணோடு சுற்றுகிறதை, என்னால் தாங்கிக்கொள்ளவே
முடியவில்லை. ஆவியிலும், ஆத்துமாவிலும் சோர்ந்துபோனேன்" என்று எழுதினாள்.
போதகர் ரிச்சர்ட்டு உம்பிராண்டு, பதினான்கு ஆண்டுகள் தம்முடைய விசுவாசத்
தினிமித்தமும், கிறிஸ்துவின்மேல் வைத்த அன்பினிமித்தமும், சித்திரவதைகளை
அனுபவித்தார். அவரை மிகவும் ஏளனமும், பரியாசமும் செய்து, சிறைக்
கைதிகளையெல்லாம் அவருடைய சிரசின்மேல், சிறுநீர் கழிக்க செய்தபோது, அவர்
மனமுடைந்துபோனார். ஆண்டவரே, வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமு
முடையவராயிருக்கும்போது, ஏன் என்னை கைவிட்டுவிட்டார்? கர்த்தரை
மறுதலித்துவிட்டு, விடுதலை வாங்கிவிட்டுப் போனால் என்ன?
அவருடைய பக்தியுள்ள மனைவி சொன்னாள், "ஐயா, ஒரு இடத்தில் கொஞ்சம் தீ
எரிந்து கொண்டிருந்தால், சோதனைக் காற்று, அந்த அக்கினியை எளிதாக அணைத்து
விடும். ஆனால், கர்த்தர் உங்களுக்குள் போட்ட, பரிசுத்த ஆவியின் அக்கினி
மிகப் பெரியது. சோதனை நேரங்களில், நீங்கள் அதிகமாய் பற்றியெரியும்படி,
ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்வாரே தவிர, உங்கள் அக்கினியை அணைய
விடமாட்டார். நீங்கள் உலகமெங்கும், அக்கினியை பற்ற வைப்பீர்கள்"
என்றார்கள்.
நினைவிற்கு:- *"நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்.
இரட்டிப் பான நன்மையைத் தருவேன். இன்றைக்கே தருவேன்"* (சகரியா 9:12).
சகோ. J. சாம் ஜெபத்துரை.