<b>மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல்
மகிழ்ச்சியாயிருப்பார். ஏசாயா 62:5</b>
<p>
நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில்
ராஜமுடியுமாயிருப்பாய். நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன்
தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம்
பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன்
தேசம் வாழ்க்கைப்படும். (ஏசாயா 62:2-4)
</p>
<p>
எப்சிபா என்றால் *கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்* (My delight is
in her) என்றும், பியூலா என்றால் *நீ திருமணமானவள்* என்றும் பொருள்படும்.
இன்றைக்கு அநேகர் இந்த பெயர்களை வைத்திருந்தாலும், இவை இரண்டும்
திருச்சபையாகிய மணவாட்டியின் பெயர்கள் ஆகும். மணவாட்டி திருச்சபை மீது
மணவாளன் வைத்திருக்கும் மாபெரும் அன்பை விளக்கும் இந்த தீர்க்கதரிசன
வசனம் நிறைவேற வேண்டுமெனில் மணவாளனுக்கும், மணவாட்டி திருச்சபைக்கும்
திருமணம் நடக்க வேண்டும். இயேசு மத்திய ஆகாயத்தில் வந்து திருச்சபையில்
உள்ள பரிசுத்தவான்களையும் பரிசுத்தவதிகளையும் தம்மோடு எடுத்துக்கொள்ளும்
நிகழ்வை *இயேசுவின் இரகசிய வருகை அல்லது எடுத்துக் கொள்ளப்படுதல்*
(Secret advent of Christ or Rapture) என
அழைக்கின்றோம்.
</p>
<p>
யூத கலாச்சாரத்தின்படி முதலில் திருமணம் நிச்சயிக்கப்படும். ஒரு
குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மணப்பெண்ணுக்கும் மணவாளனுக்கும் திருமணம்
நடைபெறும். தற்பொழுது திருச்சபையாகிய மணப்பெண் மணவாளன் இயேசுவுக்காக
நிச்சயிக்கப்பட்டுள்ளது. *ஆட்டுக் குட்டியானவரின் கலியாண விருந்துக்கு
அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்* என்ற வெளி 19:9 வசனத்தின் மூலமாக
பரிசுத்தமாய் வாழ்பவர்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு இந்த திருமணம்
நடக்கும் என நம்மால் அறிய முடிகின்றது. எப்பொழுது இந்த திருமணம்
நடக்கும், எப்பொழுது நான் மணவாளன் இயேசுவைக்காண்பேன் என மணவாட்டி
திருச்சபையாகிய நாம் அனைவரும் ஏக்கத்துடன் காணப்பட வேண்டும்.
</p>
<p>
அப்போஸ்தலனாகிய பவுல் திருச்சபைக்கு, *நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக்
கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால்,
உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்* (2 கொரி 11 2)
எழுதியுள்ளார். மேலும் *புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்;
அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, பரிசுத்தமும்
பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன்
நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். நாம் அவருடைய
சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய
எலும்புக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்* (எபேசியர் 5: 25-27,30)
என்றும் நமது மேன்மையை
எடுத்துரைகின்றார்.
</p>
<p>
புது நாமத்தால் நீ அழைக்கப்படுவாய் என்ற (ஏசாயா 62:2-4) தீர்க்கதரிசன
வாக்கின்படி மணவாட்டி திருச்பைக்கும் மனவாளன் இயேசுவுக்கும் திருமணம்
நடந்த பிறகு *பரிசுத்த நகரமாகிய புதிய எருசலேம்* என்ற புதிய பெயர்
மணவாட்டி திருச்பைக்கு வழங்கப்படும் (வெளி 21:2). *அவர் எருசலேமை
ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரைக்கும் அவரை
அமர்ந்திருக்கவிடாதிருங்கள்* (ஏசாயா 62:7) என்ற வசனத்தின்படி அதற்காக
ஜெபிக்கவேண்டியது நமது கடமை. மணவாளன் மணவாட்டியின்மேல்
மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.
ஏசாயா 62:5-ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசன வாக்கு நிச்சயமாக நிறைவேறும்.
</p>
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்