என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்....?
இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போது"என் தேவனே என் தேவனே ஏன்
என்னைக் கைவிட்டீர்"என்று கூறியதும், இயேசுக்கிறிஸ்து பிதாவைவிடத்
தாழ்வானர் என்பதற்கான ஆதாரமாய் உள்ளது என்று யெகேவாவின் சாட்சிகள்
கருதுகின்றனர். இயேசு கிறிஸ்து உண்மையிலேயே தேவனாய் இருந்திருந்தால் அவர்
இவ்வாறு பிதாவை நோக்கி "தேவனே" என்று அழைத்திருக்க மாட்டார் என்பதே
இவர்களின் தர்க்கமாகும்.(40). எனினும், உண்மையில் இயேசுக்கிறிஸ்துவுக்கு
சிலுவையில் என்ன நடந்து என்பதை நாம் அறிந்திருந்தால் மட்டுமே அவரது
இக்கூற்றை சரியாக புரிந்து கொள்ள முடியும். அதேசமயம், "தேவனோடு எப்போதும்
ஐக்கியமாயிருந்த இயேசு தேவனால் கைவிடப்பட்டதை புரிந்து கொள்ளாத வரையில்,
அவரது சிலுவை மரணத்தையும் நம்மால் சரியாக விளங்கிக் கொள்ள முடியாது.
(41). இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போதே எத்தகைய நிலையில்
இருந்தார் என்பதை அடிப்படையாகக் கொண்டே அவரது இக்கூற்றை நாம் விளங்கிக்
கொள்ள வேண்டும்.
சிலுவையில் இயேசு நமக்காக பாவமானார் என்று வேதம் கூறுகிறது. (2 கொரி.
5:21). பரிசுத்தமான தேவன் பாவத்தை வெறுப்பவராகவும் (சங். 5:5, 11:5, சக.
8:17) அதைப் பார்க்க விரும்பாதவராகவும் இருக்கிறார். (ஆப. 1:13). பாவம்
தேவனை மற்றவர்களிடமிருந்து பிரித்து விடுகிறது. (ஏசா. 59:2).இதனால்
இயேசுக்கிறிஸ்து சிலுவையில் உலக மாந்தர் அனைவருடைய பாவங்களையும் சுமந்து
தீர்த்து நமக்காகப் பாவமாகியபோது (2 கொரி. 5:21, யோவா. 1:29) அவர்
தேவனால் கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தார். அதுவரைகாலமும் அவருக்கும்
தேவனுக்குமிடையில் இருந்த அந்நியோன்ய சம்பந்தமான உறவு அச்சந்தர்ப்பத்தில்
இல்லாமல் போய்விட்டது. "பாவத்திற்கான தேவ தண்டனையின் கடுமையான பகுதி,
தேவனிடமிருந்து முற்றிலுமாய் அப்புறப்படுத்தலாகும். இயேசுக்கிறிஸ்து
மானிட பாவங்களுக்கான முழுமையான தண்டனையையும் சிலுவையில் அனுபவித்தமையால்
அச்சந்தர்ப்பத்தில் தேவனோடிருந்த உறவு துண்டிக்கப்பட்ட நிலையிலேயே அவர்
இருந்தார். (42)
பாவமற்ற இயேசுக்கிறிஸ்து சிலுவையில் பாவியைப் போல மரித்து அதன் கொடூரமான
தனிமையை அனுபவித்தார். (43) உண்மையில், " இயேசுக்கிறிஸ்துவுக்கும்
தேவனுக்குமிடையில் அதுவரை காலமும் முறிவடையாமல் இருந்த உறவு சிலுவையில்
முறிவடைந்தது. (44) இதனால் "சிலுவையில் இயேசுக்கிறிஸ்து தனிமையிலேயே
இருந்தார் (45) இதனால் "சிலுவையில் மரிக்கும்போது "என் தேவனே என் தேவனெ
ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று அதிக சத்தத்தோடு கத்தினார். தேவனால்
கைவிடப்பட்ட நிலையில் இருந்த மாந்தரை தேவனோடு ஒப்வுரவாக்குவதற்காக.
இயேசுக்கிறிஸ்து அம்மக்கள் இருந்த இடத்திற்கே அதாவது தேவனால் கைவிடப்பட்ட
நிலைக்கே சென்று அவர்களை மீட்டுள்ளார். இதனாலேயே சிலுவையில்
மரிக்கும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Footnote & Reference
(39) இயேசுக்கிறிஸ்துவின் இவ்வார்த்தைகள் அவர் பேசிய அரமிக் மொழியிலும்
குறிப்பிடப்பட்டுள்ளன. மத்தேயு 27.46 இல்"ஏலி, ஏலி லாமா சபக்தானி"என்னும்
வாக்கியம் எபிரேய மற்றும் அரமிக் மொழிச் சொற்கள் கலந்த ஒரு கூற்றாக
உள்ளது."ஏலி"எனும் வார்த்தை எபிரேய மொழியில் தேவனை"என் தேவனே"என
அழைப்பதாகும்.
"லாமா சபக்தானி"என்பது அரமிக்மொழி வார்த்தைகளாகும். ஆனால்
இயேசுக்கிறிஸ்துவின் இக்கூற்று மாற்குவில் அரமிக் மொழியில் மட்டுமே
உள்ளது. இதனால்தான் மாற்குவில் ஏலி என்பதற்குப் பதிலாக "எலோயி" என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு அரமிக் மொழியிலேயே பேசியிருக்க வேண்டும்
என்றும் மத்தேயுவே தேவன் எனும் வார்த்தையை எபிரேய மொழியில்
குறிப்பிட்டிருக்க வேண்டும்" என்றும் வேத ஆராய்ச்சியாளர்கள்
கருதுகிறார்கள். (D.A. Hagner, Matthew : The World Biblical Commentary,
p 844)
(40) Anonymous, Reasoning with the Scriptures, p 212
(41) J. Moltmann, The Crucified God: Cross of Christ as the Foundation
of and Criticism of Christians Theology P 149
(42) P. Green, Studies in the Cross, p 101
(43) J. Marsh, The Fullness of Time p 100
(44) L. Morris, The Gospel According to Matthew, p. 722
(45) J.V.L. Casserley, Christian Community p 14
இவ்வாக்கமானது Dr. M.S.வசந்தகுமார் அவர்கள் எழுதியயெகோவாவின்
சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்
வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி