சபையில் விசுவாசிகளுடன் பிணக்குகளின்றி வாழ வேதம் தரும் படிப்பினைகள்

சபை என்பது பரிசுத்தர்கள் மட்டுமே கூடும் இடமல்ல. பாவிகளும்,
பரிசுத்தமாக வேண்டும் என்று விரும்புபவர்களும்கூடுமிடமாகும். பாவ நோய்
பிடித்த நோயாளிகள் சுகமாகிக் கொள்ள விரும்பி வரும் வைத்தியசாலையே சபை.
எனவே பலதரப்பட்ட மட்டங்களில் மனிதர்கள் சபைக்குள் கூடுவதால் சபைக்குள்
பிணக்குகளும் அதை தீர்க்க போதகர்கள் அவஸ்தைப்படுவதும் வழமையானதாகி
விட்டது.

இதற்கெல்லாம் காரணம் விசுவாசிகள் வேதத்துக்கு கீழ்ப்படிந்து வாழாததேயாகும்.
வேதம் சபை விசுவாசிகள் பிணக்குகளின்றி வாழ சில ஆலோசனைகளை கூறுகின்றது.
இவற்றை அறிந்து அதன்படி நடந்தால் பிணக்குகளின்றி வாழலாம்.

அப்படிப்பட்ட 24 ஆலோசனைகளை வேதத்திலிருந்து எடுத்து இங்கே தருகிறேன்.

1.அடுத்தவருக்கு மரியாதை செலுத்த முந்திக் கொள்ளுங்கள். அவர் மரியாதை
கொடுத்தால் நானும் கொடுப்பேன் என்று காத்திருக்க வேண்டாம்.

(ரோம-12:10) சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்;
கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.

2.கடமைக்காக அல்ல அன்பினால் மற்றவர்களுக்கு வேலைக்காரர்களாக நடந்து கொள்ளுங்கள்.

கலா-5:13 அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்.

3.மற்றவர்களுக்கு தயவு காட்டுங்கள், மனதுருகுங்கள், மன்னிப்பு கொடுங்கள்.
அதுவும் வஞ்சகமான மன்னிப்பல்ல தேவன் மன்னித்தது போல மன்னியுங்கள்.

எபே-4:32 ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து,
கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும்
ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

கொலோ-3:13 கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

4.மற்றவர்களுக்கு புத்தி சொல்லுங்கள். எக்கேடாவது கெட்டு போகட்டும் என்று
விட்டு விடதீர்கள்.

எபே-5:19 ஒருவருக்கொருவர் புத்தி சொல்லிக் கொண்டு, உங்கள் இருதயத்தில்
கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம் பண்ணி…

கொலோ-3:16 சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப் பாட்டுகளினாலும்
ஒருவருக்கொருவர் போதித்துப் புத்தி சொல்லிக்கொண்டு,..

எபி-3:13 நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.

எபி-10:25 ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது
சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப்
புத்திசொல்லவேண்டும்.

5.மற்றவர்களுக்கு கீழ்ப்படியுங்கள். அதுவும் அவர்களுக்கு
பயப்படுகிறதினால் அல்ல தேவனுக்கு பயப்படுகிறதினால் கீழ்ப்படியுங்கள்

எபே-5:21 தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.

1பேது-5:5 நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து..

6.அடுத்தவன் விழும் வரை பார்த்து கொண்டு சுயநலமாயிருக்க வேண்டாம்.
மற்றவரை தாங்குங்கள்- தாக்க வேண்டாம்

கொலோ-3:13 ஒருவரையொருவர் தாங்கி…

எபே-4:2 அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி,

7.நான் பரிசுத்தமாயிருந்தால் போதும் என்றில்லாமல் மற்றவர்
பக்திவிருத்தியடைய நீங்கள் ஏதாவது முயற்சி செய்யுங்கள்

1தெச-5:11 ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.

8.அடுத்தவர்களுக்கு எதிராக பேச வேண்டாம்

யாக்-4:11 சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்;

9.எப்போதும் மற்றவர்களுக்கெதிராக கோள் சொல்ல வேண்டாம்.
மற்றவர்களுக்கெதிராக மொட்டைக் கடிதம் எழுத வேண்டாம்

யாக்-5:9 ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்

10.அடுத்தவருக்கெதிராக குற்றம் செய்து விட்டால் அதை ஒத்துக் கொள்ளுங்கள்.
அதை அவரிடம் அறிக்கையிடுங்கள்.

யாக்-5:16 நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை
ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்.

11.மற்றவர்களுக்கு உதவி தேவைப்படும் போது பாராமுகமாயிருக்க வேண்டாம்.

1பேது-4:10 ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.

12.மற்றவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்ப செய்ய வேண்டாம்.
ரோம-14:13 நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக.

13.மற்றவர்களின் முன்னேற்றத்துக்கு தடை போட வேண்டாம்.

ரோம-14:13 ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும்
போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

14.மற்றவர்களின் குறையை கண்டு அவர்களை ஒதுக்காமல் அவர்களின் குறையுடன்
அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள்

ரோம-15:7 கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர்
ஏற்றுக்கொள்ளுங்கள்.

15.மற்றவர்களின் முயற்சிகளையும் நற்காரியங்களையும் வாழ்த்துங்கள்

1கொரி-16:20; பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.

16.மற்றவர்களை கடித்துப் பட்சிக்கிறவர்களாயிருக்க வேண்டாம் சாந்தமாக இருங்கள்

கலா-5:15 நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள்.

17.மற்றவர்கள் கோபப்படக்கூடிய வகையில் நடந்து கொள்ள வேண்டாம். கிண்டலான
பேச்சுக்கள் மற்றும் நகைச்சுவைக்காக கூட மற்றவர்களை கோபப்படுத்த கூடாது.

கலா-5:26 ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர்
பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.

18.மற்றவர்களை மட்டம் தட்ட வேண்டாம், உயர்வாக எண்ணுங்கள்.

பிலி-2:3 ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.

19.மற்றவர்களை குத்தி காட்டுவதை விட தேற்றுங்கள்

1தெச-4:18 ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.

1தெச-5:11 ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி,
ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.

20.மற்றவர்கள் சுக துக்கத்தில் அக்கறை காட்டி அவர்களை கவனித்து கொள்ளுங்கள்

எபி-10:24 ஒருவரையொருவர் கவனித்து..

21.விருப்பத்துடன் மற்றவர்களை உபசரியுங்கள்

1பேது-4:9 முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.

22.மற்றவர்களோடு சமாதானமாய் இருங்கள்

மாற்-9:50 ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார்.

23.மற்றவர்கள் செய்யும் அநியாயத்தை சகித்துக் கொள்ளுங்கள்,
எல்லாவற்றுக்கும் நீதியை சரிக்கட்ட முயல வேண்டாம்

1கொரி-6:7 நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும்
குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச்
சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?

24.மற்றவர்களை நேசியுங்கள், அன்பாயிருங்கள்

யோவா-13:34 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில்
அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற
புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

யோவா-13:35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால்
நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.

நன்றி....!!!
சகோ.தினேஷ்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.