இயேசுவின் கடைசி ஏழு வார்த்தைகள்5. தாகமாயிருக்கிறேன்

 




இயேசுவின் கடைசி ஏழு வார்த்தைகள்


தாகமாயிருக்கிறேன் 


அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்  (யோவா 19:28).


இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு ஏற்படும் சம்பவம் ஒவ்வொன்றும், வேதவாக்கியம் நிறைவேறுவதாகவே இருக்கிறது. இயேசுகிறிஸ்து வேதவாக்கியத்திற்கு அதிக மதிப்பு கொடுக்கிறார். தாம் சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது, தம்முடைய தாயாரை யோவானிடத்தில் ஒப்புக்கொடுத்த பின்பு,  ""எல்லாம் முடிந்தது'' என்று இயேசுகிறிஸ்து அறிகிறார். அப்போது வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக ""தாகமாயிருக்கிறேன்'' என்று கூறுகிறார். 


இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது தாகமாயிருப்பது ஒரு விநோத சம்பவமல்ல. இயேசுகிறிஸ்துவின் சரீரத்திலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருக்கிறது. தம்முடைய சிலுவையை அவர் சுமந்து வந்திருக்கிறார். பல வேதனைகளை அனுபவிக்கிறார். இந்த வேதனைகளினால் இயேசுவுக்கு தாகம் உண்டாயிற்று. இயேசுகிறிஸ்து இப்போது மரணத்தின் வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் சரீரத்திலிருந்து இரத்தம் வெளியேறுவதினாலும், அவருடைய சரீரத்தில்  மிகுந்த வேதனை உண்டாவதினாலும் அவர் மரித்துக்கொண்டிருக்கிறார். 


இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது ""தாகமாயிருக்கிறேன்'' என்று கூறியது அங்கு கூடியிருந்த சிலருக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. இயேசு ஒருபோதும் தாம் அனுபவிக்கும் பாடுகளைக் குறித்து முறுமுறுத்ததில்லை. இப்போது ""தாகமாயிருக்கிறேன்'' என்று சொன்ன வார்த்தை மாத்திரமே அவர் தம்முடைய பாடுகளைப் பற்றி பேசுவதுபோல இருக்கிறது.  


இயேசுகிறிஸ்து ""தாகமாயிருக்கிறேன்'' என்று சொல்லி, தம்முடைய ஆத்தும தாகத்தை வெளிப்படுத்துகிறார். நம்முடைய மீட்பு நிறைவேறவேண்டும் என்னும் தாகம் இயேசுகிறிஸ்துவின் இருதயத்திலிருக்கிறது. ஆகையினால் வேதவாக்கியம் ஒவ்வொன்றும் நிறைவேறவேண்டுமென்பதில் இயேசுகிறிஸ்து கவனம் செலுத்துகிறார். இயேசுகிறிஸ்துவின் தாகத்தைப்பற்றிச் வேதவாக்கியம் முன்னறிவித்திருக்கிறது. வேதவாக்கியங்களெல்லாம் நிறைவேறும் என்பது இயேசுவுக்குத் தெரியும். ஆகையினால் தம்முடைய தாகத்தைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிற வேதவாக்கியமும் நிறைவேறவேண்டுமென்று  இயேசுகிறிஸ்து கரிசனையுள்ளவராகயிருக்கிறார்.   


தம்முடைய சித்தத்தினாலேயே இயேசுகிறிஸ்து ""தாகமாயிருக்கிறேன்'' என்று சிலுவை மரத்தில் தொங்கிக்கொண்டு பேசுகிறார். ""என் ஆகாரத்தில் கசப்பு கலந்துகொடுத்தார்கள் என் தாகத்திற்கு காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்'' (சங் 69:21) என்று வேதவாக்கியத்தில் முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. 


காடி நிறைந்த பாத்திரம்


 காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்ந்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள் (யோவா 19:29). 


இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைகிறவர்கள் அவருக்கு எந்தவிதமான மதிப்போ மரியாதையோ கொடுக்கவில்லை. இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது ""தாகமாயிருக்கிறேன்'' என்று கூறுகிறார். சிலுவை மரத்திற்கு அருகே காடி நிறைந்த பாத்திரம் வைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக ஒருவரை சிலுவையில் அறைந்து கொல்லும்போது, காடி நிறைந்த பாத்திரத்தை  அங்கு வைத்திருப்பது ரோமப்போர்சேவகரின் வழக்கமாகயிருக்கலாம். 


சேவகர்கள் கடற்காளை காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுக்கிறார்கள்.  இயேசுகிறிஸ்து தாகமாகயிருக்கும்போது ஒரு சொட்டு தண்ணீர்கூட அவருடைய தாகத்தைத் தணித்துவிடும். அவருக்குப் பாத்திரம் நிறைய காடி தேவையில்லை. ஒரு சொட்டு தண்ணீர் மாத்திரமே போதுமானது. இயேசுகிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போது வானம் ஒளிகொடாதிருக்கிறது. பூமி ஒரு சொட்டு தண்ணீர்கூட கொடுக்காமலிருக்கிறது. தண்ணீருக்குப் பதிலாக இயேசுகிறிஸ்துவுக்கு காடி கொடுக்கப்படுகிறது. 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.