“நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்;…” – நீதி. 24:1


“நான் எங்கே முடிவுபரியந்தம் நிலைநிற்கப் போகிறேன்?” என்ற எண்ணமே, இன்று அநேகரை இயேசுவின் சீஷர்களாய் மாறிவிடாதபடி பின்தங்கச் செய்துவிடுகிறது.  “நான் இயேசுவின் பிள்ளை” என்று தைரியமாய் குடும்பத்தாரிடம்,
நண்பர்களிடம் அறிக்கை செய்தபின்பு ஏதாகிலும் பாவத்தில் வீழ்ந்துவிட்டால் அவர்களெல்லாம் என்னை பரிகாசம் செய்வார்களே என்ற எண்ணமும், அவர்களை கிறிஸ்துவுக்குள் வேர்கொள்ளச் செய்யாதபடி தடுத்து விடுகிறது.

இயேசு நடந்தது போலவே நாமும் நடக்க வேண்டும் (1யோவான் 2:6) என்பது உண்மைதான்.  இருப்பினும், ஏதாவது ஒரு சில நேரங்களில் நாம் எல்லோருமே தடுமாறத்தான் செய்கிறோம் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.  ஆகவேதான் அப்போஸ்தலனாகிய யாக்கோபு, “நாம் எல்லோரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்” (யாக்கோபு 3:2) என்று தன்னையும் சேர்த்து குறிப்பிடுகிறார்.  ஆகவே தடுமாற்றத்தைக் குறித்து நாம் பயந்து நின்றுவிடாமல் தடுமாறி விழுந்திடும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்கவேண்டும்.  அது என்ன? உடனே குதித்தெழுந்து தொடர்ச்சியாக நம் ஓட்டத்தை ஓட வேண்டும்.  அவ்வளவுதான்!

தேவன் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார்? என்பதில் நம்மில் அநேகர் தவறான கருத்தே கொண்டிருக்கிறோம்.  “நாம் அவரிடத்தில் செல்வதற்கு முன்பாக எல்லாம் 100/100 சரியாக இருக்கவேண்டுமென ஆண்டவர் எதிர்பார்ப்பார்” என நாமாகவே எண்ணிக்கொள்கிறோம்.  ஆனால் உண்மை அதுவல்ல.  “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” என்றே கூறுகிறார்.  ஆம் மனிதர்களால் புறம்பாக்கப்படும் எவரையும் அவர் ஏற்றுக்கொள்கிறார்.  எப்படிப்பட்ட இடத்தில் நின்று கொண்டிருந்தாலும் நீங்கள் இந்த அற்புத வாக்குத்தத்தத்தை மறந்து போகாதீர்கள்.

ஆகவே பிரியமானவர்களே! விழுந்து விடுவோம் என எண்ணி ஓடாமல் ஒதுங்கி விடாதீர்கள்.  விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே குற்ற உணர்வோடு கிடக்காமல் ஆண்டவரிடம் திரும்பி, “ஆண்டவரே, நீர் என்னை ஒருக்காலும் புறம்பே தள்ளிவிடமாட்டீர் என்பதை விசுவாசிக்கிறேன்.  இதோ உம்மிடம் மீண்டும் வருகிறேன்” என்று கூறி குதித்தெழுந்து உங்கள் ஓட்டத்தை தொடருங்கள்.  தேவன் உங்களுக்குச் செய்யும் அற்புதத்தை நீங்களே கண்ணார காண்பீர்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.